சென்னையில் கிராமக்கோயில் பூசாரிகள் மாநாடு 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் நேற்று நடந்த கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் பூசாரிகளின் நலனுக்கான 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மயிலாப்பூரில் நேற்று நடந்த கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.1,500 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 6,000 பூசாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிடும் அடையாளமாக 11 பூசாரிகளுக்கு அதற்கான காசோலைகளை வழங்கினார். மேலும், 10 பூசாரிகளுக்கு பூசை உபகரணங்களையும், 2 பூசாரிகளுக்கு இருசக்கர வாகனம் நம்முடைய அரசு பொறுப்பேற்ற ஆயிரத்து 759 நாட்களில், 4 ஆயிரத்து 335 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் கீழ், 29 அர்ச்சகர்களை பணி நியமனம் செய்திருக்கிறோம். 12 பெண் ஓதுவார்கள் உள்பட 46 ஓதுவார்களை பணி நியமனம் செய்திருக்கிறோம். இதுபோல் ஏராளமான சாதனைகள் இருக்கிறது. பூசாரிகளின் நலனுக்கான 11 புதிய அறிவிப்புகளை வெளியிட விரும்புறேன்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் புத்தாடை வழங்கப்படும். உறுப்பினர் மரணம் அடைந்தால், அவருடைய வாரிசுதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். கிராம கோயில் பூசாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு வருமான உச்சவரம்பு 72 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது உங்களுடைய கோரிக்கையை ஏற்று ஆண்டுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

இயற்கை எய்திய உறுப்பினரின் ஈமச்சடங்குக்காக தற்போது வழங்கப்படும் தொகை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அருகாமையில் இருக்கின்ற பெரிய திருக்கோயில்கள் மூலம் ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு, தேர்ந்த பயிற்றுநர்களை கொண்டு புத்தொளிப் பயிற்சி நடத்தப்படும். தற்போது பூசாரிக்கு 3 ஆயிரம், பூசாரிகளின் மகனுக்கு 3 ஆயிரம், மகளுக்கு 5 ஆயிரம் என திருமணத்துக்கு வழங்கப்படும் நிதி உதவி, மேலும் ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படும். பூசாரிகளின் மகன், மகளுக்கு தற்போது வழங்கப்படும் பள்ளிக்கல்வி நிதி உதவி, மேலும் ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு, 2 ஆயிரம் மற்றும் 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

பூசாரிகளின் மகன், மகளுக்கு தற்போது ஒவ்வொரு கல்வி ஆண்டும் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு நிதி உதவி ஆண்டுக்கு மேலும் 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படும். பூசாரிகளின் மகன், மகளுக்கு தற்போது ஒவ்வொரு கல்வி ஆண்டும் வழங்கப்படும் தொழில் சார்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு நிதி உதவி, ஆண்டுக்கு மேலும் 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படும். பூசாரிகளின் மகன், மகள் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயில ஆண்டுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். உறுப்பினர்களுக்கு மூக்குக் கண்ணாடி வாங்க தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் நிதி உதவி ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். உங்கள் ஆதரவோடு திராவிட மாடல் ஆட்சி தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: