சென்னை மாநகராட்சி சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்து 5 நாள் விழிப்புணர்வு பயிற்சி

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தலின்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மாநகராட்சியின் மூலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறாக, பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் சார்பில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்புணர்வை வலுப்படுத்தும் 5 நாள் விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட்டது.

ஒவ்வொரு நாளும் இந்த பயிற்சி திட்டத்தில் 200 பெண்கள் மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 100 ஓட்டுநர்கள். நடத்துநர்கள் கலந்து கொண்டனர். சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த பயிற்சிகள் நடைபெற்ற அனைத்து நாட்களிலும் தெருநாடகம், குறும்படம் திரையிடல், கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிறைவு விழாவில் திரைப்பட நடிகை சுஹாசினி மணிரத்னம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு குறித்து வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளை எடுத்துக்காட்டி, “பாத்துக்கிட்டு போகாதீங்க… பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” என்ற கருத்தை வலியுறுத்தினார். மேலும், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பெண்கள் பயணிகளுக்கான சகோதரர்களாக இருந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஊக்கமளித்தார்.

உலக வங்கியின் மூத்த ஆலோசகர் வெங்கடேஷ் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் சார்பில், பார்வையாளர் தலையீடு செய்வதன் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கினார். மேலும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அவசர சூழ்நிலைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்த நிலைகள் மற்றும் அத்தகைய தருணங்களில் பார்வையாளர்கள் எவ்வாறு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று விளக்கப்பட்டது.

Related Stories: