கொல்கத்தா: வரும்6ம் தேதி அன்று நாடு முழுவதும் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தமது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில், ‘ அமைச்சர் பாபுல் சுப்ரியோ, முன்னாள் டிஜிபி ராஜீவ் குமார், மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி மற்றும் நடிகை கோயல் மல்லிக் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்களில், பாபுல் சுப்ரியோ கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். மற்றொரு வேட்பாளரான முன்னாள் டிஜிபி ராஜீவ் குமார், சாரதா சிட்பண்ட் மோசடி விசாரணையின் போது மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு இடையேயான பெரும் மோதலின் மையமாக இருந்தவர் ஆவார். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான மேனகா குருசாமி, கடந்த 2018ம் ஆண்டு சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்து ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக மாற்றுவதற்கு வழிவகுத்த வழக்கில் ஆஜரானவர்.
