கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. டிச.16 அன்று வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் 7.66 கோடியாக இருந்த வாக்காளர்கள் 7.08 கோடியாக குறைக்கப்பட்டனர். அதை தொடர்ந்து ஆய்வு பணிகள் நடந்தது. இறுதிப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 7.04 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 63.66 லட்சம் பெயர்கள், அதாவது கிட்டத்தட்ட 8.3 சதவீத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் மதிப்பீடு செய்யப்படாதவர்கள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது பெயர்களை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் ஆய்வு செய்வார்கள். முதல்வர் மம்தா பானர்ஜியின் பபானிபூர் தொகுதியில், 47,094 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அங்கு 14,000 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். 2021 தேர்தலில் இந்த தொகுதியில் மம்தா 58,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மிக அதிக நீக்கம் வங்கதேச எல்லையில் உள்ள நாடியா மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்கு மொத்தம் 44.18 லட்சம் வாக்காளர்களில் 2.73 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
