ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி(தனி) மற்றும் திருவாடானை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நான்குமே திமுக கூட்டணி வசம் உள்ளது. அதிமுகவால் மாவட்டத்தில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியவில்லை. இதனால் வரும் தேர்தலில் ஒரு தொகுதியையாவது எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டுமென அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். முக்கிய நிர்வாகிகள் பலரும் சீட்டை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரம் அதிமுக, பாஜ, அமமுக என கூட்டணி அமைந்துள்ளதால் மற்றவர்களும் தங்களுக்கு என தொகுதிகளை கேட்டு வருகின்றனர். இதனால் இருக்கும் நான்கில் குறைந்தது 2 கூட்டணிக்கு போய்விடுமோ என்ற கவலை ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவினரிடம் எழுந்துள்ளது. முதுகுளத்தூர் தொகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் எம்எல்ஏவாக இருக்கிறார்.
இந்த தொகுதியில் கடந்த 2016 முதல் 2021 வரை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த மலேசியா பாண்டியன், தற்போது அதிமுகவில் சேர்ந்து இந்த தொகுதியில் மீண்டும் சீட் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவரை எதிர்த்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமியின் மனைவியான கீர்த்திகாவும் முதுகுளத்தூர் தொகுதி எனக்கு அல்லது என் கணவருக்கு என்ற கணக்கில் தீவிரமாக உள்ளார்.
முனியசாமி எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர் என்பதால் எங்கள் குடும்பத்திற்கு தான் நிச்சயம் சீட் என்று தொகுதியை மட்டுமல்லாது மாவட்டத்தையே சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர். இதே தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான அமமுகவைச் சேர்ந்த முருகனும் எனக்கு தான் சீட், கூட்டணியில் முதுகுளத்தூர் அமமுகவிற்கு ஒதுக்கியாச்சு. நாங்கள் தேர்தல் வேலையை ஆரம்பிக்கப் போகிறோம் என தனது போட்டியாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தி வருகிறார்.
அதே நேரம் தனது தோல்விக்கு காரணமான மலேசியா பாண்டியன் மற்றும் முருகன் ஆகியோர் இந்த முறை ேபாட்டிக்கு வந்து மல்லுகட்டுவதால் ஒருவேளை முதுகுளத்தூர் கைவிட்டு போனால், நாம பேசாம திருவாடானை பக்கம் போய்விடலாம் என அங்கும் ஒரு காலை முனியசாமி மனைவிக்காக புக் செய்து வைத்திருந்தார். ஆனால், இந்த தொகுதியை குறிவைத்துதான் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமாரோஸ் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
அந்த சூட்டோடு சூடாக மகளிரணி இணைச் செயலாளர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி தூக்கி கொடுத்துள்ளார். தனக்கான தொகுதி மட்டுமின்றி மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளின் செலவையும் தானே கவனித்துக் கொள்வதாக லீமா, எடப்பாடிக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளாராம். இதனால், தங்களை விட லீமாரோசுக்கு கட்சியில் செல்வாக்கு உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட மாவட்ட செயலாளர் முனியசாமி, அவரது மனைவி கீர்த்திகா, எந்த பக்கம் திரும்பினாலும், கால் வைக்கும் இடமெல்லாம் நமக்கு கண்ணி வெடியாக இருக்கிறதே என கட்சியினரிடம் புலம்ப ஆரம்பித்து விட்டார்களாம்.
அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி அவர் மனைவியை எப்படியாவது மக்கள் பிரதிநிதியாக ஆக்கிவிட வேண்டுமென இதுவரை எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்துள்ளது. இந்த முறையும் நமக்கு வெற்றி கைக்கு வராவிட்டால் நமது அரசியல் எதிர்காலமே பெரும் கேள்விக்குறியாகிவிடும். அதன்பிறகு வேறுவிதமான முடிவுகளை எடுக்க வேண்டிவரும். எனவே, இந்த முறை எப்படியாவது முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளராகிவிட வேண்டும் என சேலத்திற்கும், சென்னைக்குமாய் அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கிறாராம்.
