சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஎப்எஸ் பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 25 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.inல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: இந்திய அளவில் 372 மாணவர்கள் நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 25 மாணவர்கள் நேர்முக தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர்.
இதில் ஒட்டு மொத்தமாக சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் 123 மாணவர்கள் பேர் நேர்முக தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு டெல்லியில் நடைபெறும். இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேர்முக தேர்வு பயிற்சி மற்றும் மாதிரி நேர்முக தேர்வு சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இலவசமாக அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நேர்முக தேர்வு முடிந்த பின்னர் நேர்முக தேர்வு, மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி ஒதுக்கப்படும். அதன் பின்னர் டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன பயிற்சி மையத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதை தொடர்ந்து அவர்கள் பணியில் சேர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
