சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், டவுட்டன் ஓய்எம்சிஏ அரங்கில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா, மனிதநேயம்-19 கழக தலைவர் அரசியல் திலகம் கலையும் அன்பும் கலந்த இதயம் என்ற தலைப்பில், வாழ்த்தரங்கம் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.எம்.நாதன் தலைமையிலும், அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையிலும் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர்கள் பிரபு, போஸ் வெங்கட், கவிஞர் சினேகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா, மண்டல குழுதலைவர் கூ.பி.ஜெயின், பகுதி செயலாளர்கள் சுதாகர், வேலு, இளைஞர் அணி அமைப்பாளர் வானவில் விஜய், ஏகப்பன், மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி ஸ்ரீதர், பரிதி இளம் சுருதி, புனிதவதி எத்திராஜ் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் பல்வேறு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் சினேகன், \”திமுக தலைவருக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு என்பது 2026ல் செலுத்தும் வாக்குகள்தான். மதம் என்னும் கரையான் தமிழகத்தை அழிக்க நினைக்கிறது. தலைவருக்கு கொடுக்கும் பரிசு என்பது திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெல்ல வேண்டும். மாநிலத்திற்குள்ளேயே பிரித்தாளும் வேலை நடக்கிறது. நாம் அனைவரும் அவருக்கு துணை நிற்கவேண்டும். 2026ல் கொடுக்கிற அடியில் ஒருவர்கூட உள்ளே வரமுடியாது. திராவிட மண்ணை, தளபதி மண்ணை ஒருவரும் தொட முடியாது. காவி உடையில் கரையான்கள் செய்கிறது, இதை நாம் அனுமதிக்கக்கூடாது. முதல்வருக்கு நாம் கொடுக்கும் பரிசு வெற்றிதான்” என்றார்.
நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், தமிழகத்துக்கு வரக்கூடிய ஆபத்தை தடுக்கக்கூடியவர் முதல்வர். அவரது குரல் 2026ல் ஒலிக்கவேண்டும். மோடியை டிரம்ப் ஆட்டி வைக்கிறார், எடப்பாடியை மோடி ஆட்டி வைக்கிறார். சொன்னதையும் சொல்லாததையும் செய்பவர் முதல்வர். திட்டங்களை நிறைவேற்ற மனதுவேண்டும், இது முதல்வருக்கு உள்ளது. திமுகவின் திட்டங்களை சொல்லி வாக்கு கேட்போம், தமிழர்களின் உணர்வோடு கலந்தவர் முதல்வர்” என்றார். நடிகர் பிரபு பேசுகையில், ”நான் அரசியல் பேசவரவில்லை, குடும்பத்தில் ஒருவராக வந்துள்ளேன். என் அப்பா சிவாஜியும் கலைஞரும் இரட்டை குழல் துப்பாக்கிபோல் இருந்தனர்.
அதே பாசத்தோடு முதல்வர் எங்களிடம் உள்ளார். கலைஞரை பெரியப்பா என்றுதான் அழைக்க வேண்டும் என்பார். அப்பாவிற்கு சிலை வைத்தார்கள். இன்று அரசு சார்பில் மரியாதை கொடுக்கிறார்கள். முதல்வருக்கு எங்கள் குடும்பம் நன்றிகடன் பட்டுள்ளது. கலைஞர்களாகிய எங்களை பார்த்து ரசிகர்களாகிய நீங்கள் கைத்தட்டி ரசிப்பதே எங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு” என்றார்.
