கேரளா ஸ்டோரி 2 படத்தை வெளியிட 15 நாட்களுக்கு தடை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளா ஸ்டோரி என்ற பெயரில் ஒரு படம் கடந்த 3 வருடங்களுக்கு முன் வெளியானது. இந்தப் படத்தில் கேரளாவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கேரளா ஸ்டோரி 2 என்ற பெயரில் ஒரு படத்தை இன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. காமாக்யா நாராயண் சிங் என்பவர் இயக்கிய இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

அதில் ஒரு இளம்பெண்ணை வேறு சில பெண்கள் சேர்ந்து கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைப்பது போன்ற காட்சிகள் இருந்தன. இந்தக் காட்சிக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கேரளா ஸ்டோரி 2 படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி கண்ணூரை சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கேரளாவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி இந்தப் படத்தின் டிரைலருக்கு தடை விதித்து உத்தரவிட்டது. நேற்று இந்த மனு மீது மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது விசாரணையை 15 நாட்களுக்கு தள்ளிவைத்த நீதிபதி பெச்சு குரியன் அதுவரை படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

Related Stories: