சென்னை: நெல்லை, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் ரூ.117.65 கோடியில் டைடல் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, ரெட்டியார்பட்டி கிராமத்தில், ரூ.39.06 கோடியிலும், விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தாலுகா, கூரைக்குண்டு கிராமத்தில் ரூ.38.72 கோடியிலும் மற்றும் ஈரோடு மாவட்டம், ஈரோடு தாலுகா, கங்காபுரம் கிராமத்தில் ரூ.39.87 கோடியிலும் என மூன்று டைடல் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும், தைவான் நாட்டை சேர்ந்த அடாடா (ADATA) டெக்னாலஜி நிறுவனத்தின் துணை நிறுவனமான அடாடா செமிகண்டக்டர் நிறுவனம், ரூ.931 கோடி உறுதிசெய்யப்பட்ட முதலீட்டில் 823 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழில் பூங்கா, உயர்தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தில் டிஆர்ஏஎம் மெமரி மாடிலஸ் ஆண்டு ப்ளாஸ் ட்ரைவ்ஸ் (DRAM memory modules and Flash drives) உற்பத்தி ஆலை அமைப்பதற்கும் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
எரோஸ் ஜென் ஏஐ (EROS GEN AI) நிறுவனம் ஐஐடி மெட்ராஸ் ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள லார்ஜ் கல்சுரல் வாயிஸ் மாடல்ஸ் (Large Cultural Voice Models) திட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் வெளியிட்டார். இத்திட்டத்தை ரூ.3,600 கோடி உறுதிசெய்யப்பட்ட முதலீட்டில் சுமார் 1,000 உயர் திறன்மிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சென்னையில் விரிவாக்கம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
