சென்னை: தமிழகத்தில் 28 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி அப்போதைய மின்துறை அமைச்சர், டான்ஜெட்கோ தலைவர் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதே கோரிக்கையுடன் அதிமுக நிர்வாகி சரவணன் என்பவர் உள்பட மேலும் இருவர் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் பி.யு.சி.எல்.சுரேஷ் வாதிட்டார்.
அதற்கு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 1987ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையின்படிதான் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. ஒப்பந்ததாரர்கள் பல ஆண்டுகளாக ஒரே விலையை தான் குறிப்பிடுகின்றனர். இதனால் அரசும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களை வழங்காவிட்டால், தமிழகம் முழுவதும் டிரான்ஸ்பார்மர்களை மாற்ற முடியாது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்குகள் தொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், டெண்டர் ஒதுக்கீடு செய்தது தொடர்பான ஆவணங்களையும், ஆரம்பகட்ட விசாரணை குறித்த ஆவணங்களையும் அரசு தரப்பு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
