சென்னை: பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குவதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை தருவதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், அனுமதி கோரி ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கரூரில் தவெக சார்பில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த தமிழக அரசு ஜனவரி 5ம் தேதி அரசிதழில் வெளியிட்டது.
இந்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, த.வெ.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுக்கூட்டங்கள் நடப்பதற்கு 30 நாட்களுக்கு முன்பு அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி தன்னிச்சையானது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது. நிகழ்ச்சி பாதுகாப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் கட்சிகள் மீது திணிக்கப்படுகின்றன என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விதிகளில் என்ன தவறு உள்ளது?. கரூரில் நடந்த வேதனைக்குரிய சம்பவத்தை தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இந்த வழிகாட்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல கட்சிகள் காளான்கள் போல தொடங்கப்படுகின்றன. அவை தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. பல தேர்தல்களில் போட்டியிட்டு, எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பெற்ற நீண்ட வரலாறு கொண்ட கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு?. மனுதாரரின் கட்சியான த.வெ.க. எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது எனவும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு தவெக தரப்பு வழக்கறிஞர், பதிவு செய்யப்பட்ட கட்சி வரும் தேர்தலில்தான் முதன்முதலில் போட்டியிடவுள்ளது. புதிய கட்சிகளுக்கு கூட்டம் நடத்த அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று வாதிட்டார்.
அரசுத்தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, இந்த வழிகாட்டி வழிமுறைகள் வெளியிடப்பட்ட பிறகு த.வெ.க. இரண்டு கூட்டங்களை நடத்தியுள்ளது. இந்த நிபந்தனைகளின்படி 5000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை தவிர்க்க 4,998 பேர் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளனர்.
ஒரே நாளில் ஒரே இடத்துக்கு பல கட்சிகள் விண்ணப்பிக்கும் போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இல்லாவிட்டால் முதலில் வருவோருக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த வழிகாட்டு விதிமுறைகளை ஏற்றுள்ள நிலையில் மனுதாரர் கட்சி மட்டும் வழக்கு தொடர்ந்துள்ளது. சேலத்தில் வெயில் காரணமாக ஒருவர் இறந்த பிறகு தான் வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் மேற்கூரை அமைத்துள்ளனர் என்றார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆன்லைனில் விண்ணப்பங்களை பெறுவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்க கூடாது என்று அரசுத்தரப்பிடம் கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கில் 3 வாரங்களில் தமிழக அரசு பதில் தரவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
* கூட்டத்தில் 5 ஆயிரம்பேர் கலந்துகொண்டால் வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை தவிர்க்க 4998 பேர் என்று தவெகவினர் விண்ணப்பித்தனர்- தமிழக அரசு.
* சேலத்தில் ஒருவர் இறந்ததால்தான் வேலூர் நிகழ்ச்சியில் பந்தல் போடப்பட்டுள்ளது.
