மீனம்பாக்கம்: ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இன்று காலை உள்நாட்டு விமானப் பயணிகளுக்கான கோடைக்கால சிறப்பு தள்ளுபடி கட்டணத்தில் பயண டிக்கெட்டுகளை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன உள்நாட்டு விமானங்களில் கோடைக்கால சிறப்பு தள்ளுபடியாக, குறைந்தபட்சம் ரூ.1,550 சலுகை கட்டணத்தில் விமானப் பயணிகள் உள்நாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம்.
அதோடு சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஐதராபாத், கொச்சி உள்பட இந்தியாவின் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில், கோடைக்கால சிறப்பு தள்ளுபடியாக, குறைந்தபட்சம் ரூ.5,420 சலுகை கட்டணத்தில் பயணிகள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம். இதுதொடர்பாக, இன்று முதல் வரும் மார்ச் 1ம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் உள்பட அனைத்து முக்கிய முன்பதிவு தளங்களிலும் கட்டண சலுகை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இக்கட்டண சலுகை டிக்கெட்டுகளை, வரும் மார்ச் 3ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதிக்குள் உள்நாடு மற்றும் சர்வதேச விமான பயணங்களுக்காக எந்தவொரு நாட்களில் வேண்டுமென்றாலும் பயணிகள் பயன்படுத்தி பயணம் செய்யலாம். எனினும், இந்த சலுகை கட்டண டிக்கெட்டுகளில் செல்லும் பயணிகள், தங்கள் கையில் எடுத்து செல்லும் லக்கேஜுக்கு மட்டுமே அனுமதி. கூடுதல் எடையிலான செக்-இன் லக்கேஜ் எடுத்து சென்றால், அதற்கு பயணிகள் தனியே கட்டணம் செலுத்த வேண்டும்.
அதோடு, இந்த சலுகை கட்டண டிக்கெட்டுகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். வேறெந்த ஏர்இந்தியா விமானங்களில் இந்த சலுகை கட்டண டிக்கெட்டுகள் கிடையாது என்று ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
