சென்னையில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு: அண்ணாமலை புறக்கணித்தார்

 

சசிகலா புதிய கட்சியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை- நயினார் நாகேந்திரன் பேட்டி

சென்னை: சென்னையில் பாஜக தேர்தல் அலுவலகம் இன்று காலை திறக்கப்பட்டது. இந்த விழாவை அண்ணாமலை புறக்கணித்தார். சசிகலா புதிய கட்சியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிமுக தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜக தேர்தல் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாஜகவின் தலைமைத் தேர்தல் அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மகாலில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் பொன்ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர் கலந்து கொண்டனர். இந்த அலுவலகத்தில் பிரசாரங்களை ஒருங்கிணைப்பது, விளம்பரத் துறை, பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, சமூக ஊடகப் பிரிவு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, சட்ட உதவி, தலைவர்கள் சுற்றுப்பயண ஏற்பாடு, அகில இந்திய தலைவர்கள் வருகை, தங்க வைத்தல், பிரசாரத்துக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்தல், வாகனங்கள் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட 30 துறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கூட்ட அரங்கம், தலைவர் அறை, முக்கிய தலைவர்கள் கலந்துரையாடும் அறை உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் திறந்து வைப்பதாக இருந்தது. மேலும் அவர் எடப்பாடியுடன் இன்று தொகுதி பங்கீட்டை இறுதி செய்யவும் இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவர் சென்னைக்கு வரவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது, தமிழகத்தில் மெகா கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டது. இதற்காக கட்சிகளை சேர்க்கும் பணியில் பாஜக ஈடுபட்டது. அவர்களின் முயற்சியில் தான் பாமக(அன்புமணி), டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணியில் இணைந்தனர்.

அதே நேரத்தில் ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால், இதற்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை. தற்போது ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் பாஜக கூட்டணியில் இணையும் முயற்சியை மாற்றி வேறு விதத்தில் தேர்தலை சந்திக்கும் வேலைகளில் இறங்கியுள்ளனர். இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எடப்பாடியின் பிடிவாதத்தால் தான் அவர்களை கூட்டணியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது என்று டெல்லி மேலிடம் எடப்பாடி மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறது. இதனால், தான் இன்று நடைபெறும் விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று பியூஸ் கோயலுக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டது.

இதையடுத்தே ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று சென்னை வருகை ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த விழாவில் முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்பார் என்று அழைப்பிதழில் அவர் பெயர் போடப்பட்டிருந்தது. ஆனால், அவரும் தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவை இன்று புறக்கணித்தார். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், ” எங்கள் கூட்டணியில் எந்த பிடிவாதமும் கிடையாது. பிரதமர் மோடி வந்து விட்டு போன பின்னர், இபிஎஸ் உடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம். எங்கள் அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ? அதே மாதிரி நாங்கள் செயல்படுவோம்.

நிறைய பேர் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள்(சசிகலா உள்பட). இன்றைக்கு மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது” என்றார்.

Related Stories: