அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம். இவர், கடந்த 2011, 2016 தேர்தல்களில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-2013 காலக்கட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து உள்ளார். கடந்த 2021ல் அங்கு போட்டியிட்டு ராமலிங்கம் தோல்வியுற்றார். இதன் பின்னர் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளராக மட்டும் தொடர்ந்து வருகிறார். ராமலிங்கத்தின் சொந்த ஊர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கள்ளிவலசு.
இவருக்கு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பதவி கொடுத்ததில் இருந்தே உள்ளூர் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஜெ., மறைவுக்கு பின் இந்த எதிர்ப்பு பூதாகாரமானது. மாநகர் மாவட்டத்தில் இருக்கும் 19 பகுதி செயலாளர்களில் 11 பேர் ராமலிங்கத்திற்கு எதிராக, தனி அணியாக செயல்பட்டு வந்தனர். இது எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா நினைவு நாள், பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.
முன்னாள் துணை மேயர் பழனிசாமி தலைமையில் பகுதி செயலாளர் மனோகரன் உட்பட 11 பேரும் தனி அணியாக செயல்படுகின்றனர். கடந்த 5 ஆண்டு காலத்தில் அதிமுகவை வளர்க்காமலும், மக்களுக்கான பிரச்னைகளை கையில் எடுக்காமலும் மவுனம் காத்து வந்ததால், மாஜி அமைச்சர் ராமலிங்கத்தின் மீது அதிமுக.வின் அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்களிடத்தில் கடும் அதிருப்தி நிலவி வந்தது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ராமலிங்கத்திற்கு ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த ராமலிங்கம், ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டால், ஏற்கனவே தன் மீது வெறுப்பில் உள்ள சொந்த கட்சியினரே தோற்கடித்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து நேரிடையாக எடப்பாடியிடம், தனக்கு ஈரோடு மேற்கு தொகுதி வேண்டாம்.
அதை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விடலாம் எனவும், சொந்த ஊரான திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் தொகுதி அல்லது ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதியை ஒதுக்கீடு செய்யுங்கள் என அழுத்தம் கொடுத்துள்ளார். ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்ற ஈரோடு மேற்கு தொகுதியில் கட்சியினரை கண்டு பயந்து, அந்த தொகுதியில் போட்டியிடாமல் வேறு தொகுதி கேட்டுள்ள சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
* வாரிசுக்கு சீட் கேட்டு மனு
மாஜி அமைச்சர் ராமலிங்கம் தனது மகனான அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்விக்கும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு விருப்பம் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியை கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளார். இச்செய்தியை அறிந்த கட்சியினர், அதிமுக.விற்காக பல ஆண்டுகளாக பணி செய்யும் தகுதியானவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கும்போது வாரிசு அடிப்படையில் எம்எல்ஏ சீட் கேட்பது நியாயமா என கொந்தளித்து வருகின்றனர்.
