சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் பணி ஒதுக்கீடு ஆலோசனை கூட்டம்

*மாவட்ட தேர்தல் அலுவலர் பங்கேற்பு

கடலூர் : கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு பொறுப்பு அலுவலர்களை நியமிப்பது மற்றும் அவர்களுக்கான பணிகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் பணியாற்றுவதற்கான அலுவலர்கள், பணியாளர்களை கண்டறிந்து பட்டியலிட்டு பணிகளை ஒதுக்கீடு செய்து வழங்கிட வேண்டும்.

தேர்தல் நடத்துவதற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் ஒதுக்கீடு செய்த பின்னர் சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கும், வாக்குசாவடிகளுக்கும் அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (என்எல்சி நிலஎடுப்பு) மேற்கொள்ள வேண்டும்.வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையிலிருந்து சட்டமன்ற தொகுதிகளுக்கும், அங்கிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்வதற்கு தேவையான வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். தேர்தலின்போது அலுவலர்கள் பணியாற்ற தேவையான பயிற்சி வகுப்புகளை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மேற்கொள்ள வேண்டும்.

வாக்குச் சாவடி மையங்களிலும், பயிற்சியின் போதும் அலுவலர்களுக்கு பயன்படுத்துவதற்கு தேவையான விண்ணப்பங்கள், உபகரணங்கள், பேனா, பென்சில், அடையாள மை போன்றவற்றின் தேவை அளவை கண்டறிந்து மாநில அலுவலகத்திலிருந்து பெற்று தனித்துணை ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக அனைத்து இடங்களிலும் கடைபிடிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) உறுதிபடுத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தேர்தலின்போது மேற்கொள்ளும் செலவினங்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கண்காணித்திட வேண்டும். சட்டம் ஒழுங்கை பராமரித்தல், தேர்தல் பார்வையாளர்களுக்கான உதவியாளர் ஒதுக்கீடு, வாக்கப்பதிவின் போது பயன்படுத்தப்படும் வாக்குச் சீட்டு, தபால் வாக்கு சீட்டு போன்றவற்றை அச்சிடுதல், வேட்பாளர்கள் வெளியிடும் விளம்பரங்கள், தேர்தல் விதிமீறல்களை கண்டறிதல், தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைத்தல், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்திட விழிப்புணர்வு ஏற்பாடு செய்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்குப்பதிவு மேற்கொள்ள தேவையான நடவடிக்கை செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அலுவலர்கள் தங்களது பணியினை சிறப்பான முறையில் மேற்கொண்டு தேர்தல் சீரான முறையில் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணியகோட்டி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திருநாவுக்கரசு, அண்ணாமலை பல்கலைகழக இணை பதிவாளர் ஜெகதீஸ்வரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: