சென்னை : கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 2000ம் ஆண்டு, ஜூலை 30ம் தேதி, ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் தனது பண்ணை வீட்டில் இருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை, சந்தனக் கடத்தல் வீரப்பன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்திச் சென்றார். இதையடுத்து 108 நாட்கள் பேச்சுவார்த்தைக்கு பின், ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார். இந்த கடத்தல் தொடர்பாக வீரப்பன், சந்தன கவுடா, மல்லு, சேத்துக்குளி கோவிந்தன், மாறன், கோவிந்தராஜ், அன்றில், செல்வம், அமிர்தலிங்கம், பசுவண்ணா, நாகராஜ், பொட்டுசாமி, ராமா ஆகிய 14 பேர் மீது தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், 2004ம் ஆண்டு வீரப்பன், அவருடைய கூட்டாளிகள் சந்தன கவுடா, மல்லு, சேத்துக்குளி கோவிந்தன் ஆகியோர் தர்மபுரி அருகே அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ரமேஸ் என்பவர் இதுவரை தலைமறைவாக உள்ளார். இது தொடர்பான வழக்கு 18 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், முக்கிய சாட்சிகளான ராஜ்குமார், அவரது மனைவி பர்வதம்மாவிடம் விசாரணை நடத்தவில்லை எனவும் பிணைத் தொகை கேட்கும் ஆடியோ கேஸட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் கூறி, ஒன்பது பேரையும் விடுதலை செய்து கோபிசெட்டிபாளையம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, 9 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிசிஐடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு, காவல் துறை மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து, 9 பேரை விடுவித்த கோபிச்செட்டிபாளையம் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.
