- மாமல்லபுரத்தில்
- ஐரோப்பிய ஒன்றிய
- மாமல்லபுரம்-புதுச்சேரி 4 நெடுஞ்சாலை
- கிழக்கு கடற்கரை சாலை
- Kadambadi
- புதுச்சேரி
மாமல்லபுரம்: மாமல்லபுரம்-புதுச்சேரி 4 வழிச்சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வரும் நிலையில், கடம்பாடி பகுதிக்கு செல்ல வழி ஏற்படுத்தாதை கண்டித்து பெண்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே ரூ.1,270 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி, கடம்பாடி, மணமை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 4 வழிச்சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சின்னம்மன் கோயில் மற்றும் கிராம மக்கள் செல்வதற்கு எவ்வித வழியும் ஏற்படுத்தாமல் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டது.
அப்போது, கடம்பாடி ஊராட்சி தலைவர் தேன்மொழி சுரேஷ்குமார் மற்றும் கிராம மக்கள் கடம்பாடி பகுதியில் உலக பிரசித்தி பெற்ற சின்னம்மன் கோயில் உள்ளது, இக்கோயிலுக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் தினமும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வருகின்றனர். மேலும், உள்ளூர் மக்கள் பள்ளி – கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பலர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று வருகின்றனர்.
இதனால், ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கடம்பாடிக்கு செல்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளாமலும், வாகனங்கள் திரும்ப வழி ஏற்படுத்தாமலும் 4 வழிச்சாலையை அமைத்தனர்.
இந்நிலையில், ஆத்திரமடைந்த கடம்பாடி கிராம பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர்.
பின்னர், திடீரென சாலையை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்த மாமல்லபுரம் டிஎஸ்பி அறிவழகன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சுமூகமான பேச்சு வார்த்தை நடத்தி, 10 நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையேற்று, பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, கடம்பாடி கிராம பெண்கள் கூறுகையில், 4 வழிச்சாலை அமைக்கும் போதே எங்கள் கிராமத்திற்கு வாகனங்கள் சுலபமாக வந்து செல்லும் வகையில் வழி ஏற்படுத்த வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தோம்.
ஆனால், ஒன்றிய சாலை மேம்பட்டு நிறுவன அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாமல் 4 வழிச்சாலை அமைத்து விட்டனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட வர முடியாமல், 3 கி.மீ தூரம் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
