விடாமுயற்சியின் முடிவு வெற்றியே!

ஒருகாலத்தில் இரண்டு சகோதரர்கள் வாழ்க்கையை நடத்துவதற்காக தெருக்களில் கிடக்கும் துருப்பிடித்த இரும்புத் துண்டுகளையும், எலும்புத் துண்டுகளையும் சேகரித்து விற்று வாழ்ந்து வந்தனர். பின்னர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் எங்கு சென்றாலும் தோல்வியை மட்டுமே எதிர்கொண்டனர்.ஒருநாள், அவர்களில் ஒருவன் நூலகத்திற்குச் சென்றான். அங்கு அவன் படித்த ஒரு கதை அவன் சிந்தனையை மாற்றியது. அந்தக் கதையில், ஒரு மனிதன் இறக்கைகள் இன்றி, ஒரு கருவியின் உதவியால் வானில் பறப்பதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணம் அவன் மனதில் தீப்பொறியாக எரியத் தொடங்கியது “நாமும் ஏன் பறக்கக்கூடாது?”அவன் தனது சகோதரனிடம்இந்தச் சிந்தனையை பகிர்ந்தான். இருவரும் இணைந்து வானில் பறப்பது குறித்து தீவிரமாக ஆராயத் தொடங்கினர். எண்ணற்ற சோதனைகள், தோல்விகள், கேலிகள் இவையெல்லாவற்றையும் தாண்டி அவர்கள் தங்கள் கனவைக் கைவிடவில்லை.

கடுமையான முயற்சிகளுக்குப்பின்னர், அவர்கள் ஒரு இயந்திரத்தை உருவாக்கினர். அந்த இயந்திரத்தின் உதவியால், 1903 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி, மனித வரலாற்றில் முதன்முறையாக வானில் சக்தியூட்டப்பட்ட பறப்பை வெற்றிகரமாக நிகழ்த்தினர். அந்த சாதனையை நிகழ்த்தியவர்கள் தான் ரைட் பிரதர்ஸ்.சிறிய எண்ணமே பெரிய சாதனையின் தொடக்கம். தோல்வி முடிவு அல்ல; அது வெற்றிக்கான படிக்கட்டு. விடா முயற்சி இருந்தால், மனிதன் வானையும் தொட்டுவிடலாம்.

இறைமக்களே, “சோர்ந்து போகாமல் நன்மை செய்வோம்; நாம் மனம் தளராதிருந்தால் தக்க காலத்தில் அறுவடை செய்வோம்.” (கலாத்தியர் 6:9) என இறைவேதம் கூறுகிறது.இறை நம்பிக்கையுடன் விடாமுயற்சி, நம்பிக்கை, உழைப்பு இவை ஒன்றாக சேர்ந்தால், மனிதன் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. நீங்களும் இறை பக்தியுடன் கனவு காணுங்கள். இரவு பகல் பாராமல் முயற்சி செய்யுங்கள். தேவன் உங்களுக்காகவும் வானத்தைத் திறப்பார்!

நாம் விதைக்கும் ஜெபமும் உழைப்பும் வீணாகாது. தாமதம் இருந்தாலும் தேவனுடைய காலத்தில் பலன் நிச்சயம். ஆகவே சோர்ந்து போகாமல், விசுவாசத்தில் நிலைத்து, இறுதி வரை ஓடுகிறவர்களே வெற்றியை காண்பார்கள்.
– அருள்முனைவர். பெவிஸ்டன்

Related Stories: