×

2026 டி20 உலக கோப்பை; அரையிறுதி போட்டி அட்டவணையில் முக்கிய மாற்றம்: ஐசிசி அறிவிப்பு

மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி அட்டவணையில் ஐசிசி முக்கிய மாற்றம் செய்துள்ளது. இதன்மூலம், இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்று, இந்தியாவுடன் மோதாத பட்சத்தில், முதல் அரையிறுதிப் போட்டியை கொழும்பில் சொந்த மண்ணில் விளையாட வாய்ப்புள்ளது. இது இலங்கை ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் 8 அணிகள் உறுதி செய்யப்பட்ட பின், ஐ.சி.சி. பங்குதாரர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது. Floating fixture எனப்படும் இந்த ஆட்டம் கொழும்பு அல்லது கொல்கத்தாவில் முதல் அரையிறுதி நடைபெறும் எனக் கூறப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால், மார்ச் 4 அன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியை கொழும்பில் விளையாடும்.

பாகிஸ்தான் தகுதி பெறாமல், இலங்கை தகுதி அடைந்து இந்தியா அல்லாத வேறொரு அணியுடன் மோதினால், இலங்கையும் இந்த முதல் அரையிறுதியைக் கொழும்பில் விளையாடும். சுருக்கமாக, பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்தால், போட்டி கொழும்பில் நடத்தப்படும். பாகிஸ்தான் தகுதி பெறாமல், இலங்கை அணி அரையிறுதிக்கு வந்து, இந்தியாவை எதிர்கொள்ள நேராவிட்டால், இலங்கையும் கொழும்பிலேயே விளையாடும். இரு அணிகளில் எதுவும் தகுதி பெறாத நிலையில், முதல் அரையிறுதி கொல்கத்தாவிலும், இரண்டாவது அரையிறுதி மும்பையிலும் நடைபெறும்.

இந்த சிக்கலுக்குக் காரணம், பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் வாரியம் இடையேயான ஒப்பந்தப்படி பாகிஸ்தான் இந்தியாவில் எந்தப் போட்டியிலும் விளையாட முடியாது என்பது தான். தற்போது, இலங்கை ரசிகர்களுக்காக தான் கொழும்பில் அரையிறுதி நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் அரையிறுதிப் போட்டி இடமும் ஒரு அளவுக்கு தான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா தகுதி பெற்றால், எதிரணி எதுவானாலும் மும்பையிலேயே விளையாடும். ஆனால், இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதியில் மோத நேர்ந்தால், அந்தப் போட்டி கொழும்புக்கு மாற்றப்படும்.

இந்தியா, பாகிஸ்தான் அல்லது இலங்கை ஆகிய மூன்று அணிகளில் எதுவும் அரையிறுதிக்கு தகுதி அடையாத பட்சத்தில், சூப்பர் 8ல் குரூப் 1 வெற்றியாளர் குரூப் 2ல் இரண்டாம் இடத்தைப் பிடித்த அணியை கொல்கத்தாவிலும், குரூப் 2 வெற்றியாளர் குரூப் 1ல் இரண்டாம் இடத்தைப் பிடித்த அணியை மும்பையிலும் வழக்கமான அட்டவணைப்படி சந்திப்பார்கள். சூப்பர் 8ல் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் குரூப் 2ல் இடம்பெற்றுள்ளன. இதனால், இவ்விரு அணிகளும் அரையிறுதியில் நேருக்கு நேர் மோத வாய்ப்பில்லை.

முன்னதாக அறிவிக்கப்பட்ட அட்டவணை படி, பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றால், முதல் அரையிறுதிப் போட்டியை கொல்கத்தாவுக்குப் பதிலாக கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானம் நடத்தும் என்று மட்டுமே அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. முந்தைய திட்டத்தின்படி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு வந்தால், அந்த முக்கியப் போட்டி கொழும்பில் நடக்கும். ஆனால், இலங்கை இறுதிப் போட்டிக்கு வந்தால், தங்கள் சொந்த மண்ணில் விளையாடுவார்களா என்பது குறித்து புதிய அறிவிப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Tags : 2026 T20 World Cup ,ICC ,Mumbai ,India ,Colombo ,
× RELATED சென்னை புறநகர் ரயில் சேவைகள் திடீரென...