தமிழக அரசியல் மீண்டும் ஒருமுறை அதிமுகவைச் சுற்றி, குறிப்பாக சசிகலா குடும்பத்தைச் சுற்றி சூடுபிடித்துள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென அதிமுக-பாஜ கூட்டணியில் இணைந்தது சசிகலா வட்டாரங்களை அதிர்ச்சியடையச் செய்தது. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரனின் இந்த மாற்றம் பல கேள்விகளை எழுப்பியது. இந்த சூழலில் சசிகலா அமைதியாக இருந்தாலும், அரசியலில் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் என கூறப்படுகிறது. டிடிவி தன்னை அரசியல் ரீதியாக புறக்கணித்துவிட்டார் என்ற உணர்வு சசிகலாவுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் அமமுக அமைப்பை பலவீனப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளுடன் சசிகலா தரப்பு தொடர்பில் இருப்பதாகவும், பலர் புதிய அமைப்பில் சேர சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோன்று அதிமுகவில் இருந்த சில முன்னாள் அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனவே, சசிகலா தொடங்க உள்ள புதிய கட்சியில் அமமுகவினர் பலர் இணைவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமமுக உடைந்துபோகும் என்றும், அதிமுகவிலும் சில அதிருப்தியாளர்கள் சசிகலா பக்கம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை சசிகலாவுக்கு இருப்பதாகவும் தெரிகிறது. இதனை தெரிந்துகொண்ட டிடிவி தினகரன் தரப்பும், எடப்பாடி தரப்பும் உச்சகட்ட உஷார் நிலையில் உள்ளதாம்.
