- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- கொளத்தூர், சென்னை
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (23.2.2026) சென்னை, கொளத்தூர், அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை,
இன்றைய நாள், என்னை நினைத்து நானே பெருமை கொள்ளக்கூடிய நாள். அந்த பெருமைக்குக் காரணம் இது போன்ற சிறந்த கல்லூரியை உங்களுக்காக இன்றைக்கு திறந்து வைத்திருக்கிறேன். முகப்பிலிருந்து, வகுப்பறைகள் வரைக்கும் World class போன்று சிறப்பாக வந்திருக்கிறது. நான் எப்படி வரவேண்டும் என்று நினைத்தேனோ, அதைவிட பல மடங்கு சிறப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் யார்? நம்முடைய அமைச்சர் சேகர்பாபு அவர்கள்.
நம்முடைய சேகர்பாபுவை பொறுத்தவரைக்கும், ஒரு மரத்தை நடவேண்டும் என்று சொன்னால், காட்டையே உருவாக்கி விடுவார்! கோடு போட சொன்னால், ரோடு போடுவார்! அதை நிரூபிக்கின்ற வகையில், கல்லூரிக்கு கட்டடம் கேட்டால், ஒரு பல்கலைக் கழகத்திற்காக கட்டடத்தை உருவாக்கித் தந்திருக்கிறார்.
கொளத்தூர் மட்டுமல்லாமல், சென்னையின் பல பகுதிகளைச் சார்ந்த மாணவர்களும், இதனால் பயனடையப் போகிறார்கள். அறநிலையத் துறை சார்பாக, கல்வி எனும் அறப்பணிக்கு இந்தக் கல்லூரி ஒரு சாட்சியாக இருக்கிறது.
இங்கே இருக்கக்கூடிய என்னுடைய பாசத்திற்குரிய மாணவர்களுக்கு நான் சொல்வது, கல்வி தான் கடவுள்! கல்வி எனும் கடவுள் உங்கள் எல்லாவற்றையும் வழங்கும்! அதனால் தான், அனைத்து இடங்களிலும் தொடர்ந்து சொல்கிறேன் – படியுங்கள்! படியுங்கள்! படியுங்கள்! அதுதான் உங்களை உயர்த்தும்!
எல்லோருக்கும் இது பிப்ரவரி மாதம்! ஆனால், தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’. அந்த அளவிற்கு கடந்த 20 நாட்களாக, தமிழ்நாடு முழுவதும் சுற்றி, சுற்றி மாநாடுகளில் நான் பங்கெடுத்து கொண்டு வந்திருக்கிறேன்.
இளைஞர் அணி மாநாடு; மகளிர் அணி மாநாடு; பாகமுகவர் அணி மாநாடு; மண்டல மாநாடு; பொறுப்பாளர்கள் மாநாடு; மாவட்டச் செயலாளர்கள் மாநாடு; பூத் கமிட்டி மாநாடு; இப்படி பல்வேறு மாநாடுகளை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறோம்.
மற்றொரு பக்கம், தினமும் காலை, மாலை என்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். அதுவும் கொளத்தூருக்கு வந்தால் கேட்கவே வேண்டாம். ஒரு நிகழ்ச்சிக்கு என்று சொல்லி, பத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன். பெரிய பெரிய திட்டப்பணிகளை எல்லாம் நான் தமிழ்நாடு முழுவதும் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.
தேசிய அளவிலான ஊடகங்கள் நடத்துகின்ற கருத்தரங்குகளில் கூட நான் கலந்து கொள்கிறேன். காலையில் கூட, ஒரு கருத்தரங்கு நிகழ்ச்சியை முடித்து கொண்ட பிறகு தான் இந்த கொளத்தூருக்கு வந்திருக்கிறேன். மற்றவர்களுக்கு, தொகுதிக்கு சென்று பணிகளை பார்த்துவிட்டு திரும்பி வந்து ரெஸ்ட் எடுத்து உற்சாகம் ஆவார்கள்.
ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும், கொளத்தூருக்கு வந்து, உங்களுக்காக உழைப்பதுதான் எனக்கு ரெஸ்ட் கிடைப்பதில் உற்சாகம். உங்களுக்கான திட்டங்களை தொடங்கி வைப்பது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது, உங்களுடன் சேர்ந்து பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகளை கொண்டாடுவது, இவையெல்லாம்தான் எனக்கு பெரிய பூஸ்ட்! ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும்போது, உங்களை வந்து பார்த்தால் போதும், ரிலாக்ஸ் ஆகிவிடுவேன்; இல்லை ஃபிரி ஆகிவிடுவேன்.
இன்றைக்கு பார்க்கிறீர்கள், இந்தியா முழுவதும் பின்பற்றும் மாடலாக நம்முடைய திராவிட மாடல் இருக்கிறது என்றால், அந்த திராவிட மாடல் அரசின் “மாடல் தொகுதி”-யாக இருப்பது எந்தத் தொகுதி தெரியுமா? நம்முடைய கொளத்தூர்தான் ஒரு மாடல் தொகுதியாக இருக்கிறது.
அனைத்து வகையிலும், தன்னிறைவு பெற்ற தொகுதியாக கொளத்தூரை இன்றைக்கு நாம் வளர்த்தெடுத்து இருக்கிறோம். ஏதோ, தேர்தல் வரும்போது மட்டும் ஒன்றிரண்டு திட்டங்களை திறந்து வைக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக, ஒவ்வொரு மாதமும் வந்து, உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோம்.
அதில், சிலவற்றை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது, ஜெகன்னாதன் தெருவில் அமைக்கப்பட்டிருக்கின்ற முதல்வர் படைப்பகம்! வாரத்திற்கு ஏதாவது ஒரு மீடியாவில், முதல்வர் படைப்பகம் எந்தளவுக்கு வெற்றிகரமாக செயல்படுகிறது; எத்தனை நபர்களுடைய வாழ்க்கை இதனால் மாறியிருக்கிறது என்று செய்திகள், பேட்டிகள், பதிவுகள் வந்து கொண்டே இருக்கிறது.
பெரியார் நகரில் இருக்கின்ற மருத்துவமனை – பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு, பல அதிநவீன வசதிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அதிகமான வட இந்திய மக்கள் கூட அங்கு வந்து இந்த மருத்துவமனையை பார்த்துவிட்டு, ஆச்சரியமாக சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் போட தொடங்கி இருக்கிறார்கள். நீங்களும் பாத்திருப்பீர்கள்.
ஜி.கே.எம். காலனியில், மினி ஸ்டேடியம் – ஜம்புலிங்கம் சாலையில், பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை – பெருந்தலைவர் காமராஜர் திருமண மாளிகை – இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் – கொளத்தூர் ஏரிக்கரை பூங்கா, டென்னிஸ் விளையாட்டு மைதானம், பேட்மிண்டன் கோர்ட், கால்பந்து மைதானம், ஜிம், பூங்காக்கள், நடைபாதைகள், நூலகங்கள், ஏழை மக்களுக்கான குடியிருப்புகள், இப்படி ஒவ்வொரு பகுதியிலும் உங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாகதான், இன்றைக்கு கொளத்தூரில்,ஏர் கண்டிஷன் பஸ் ஸ்டாப், செம்பியம் ரெட் ஹில்ஸ் சாலையில், ‘சாலையோர பூங்கா’, நியாய விலைக் கடை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்திருக்கிறேன்.
2007 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் இன்றைக்கு வழங்க இருக்கிறோம். கொளத்தூர் கபாலீஸ்வரர் கல்லூரிக்கு 31 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில், புதிய கட்டடங்களை திறந்து வைத்திருக்கிறோம்.
இந்தக் கல்லூரியை திறந்து சில ஆண்டுகளிலேயே 516 மாணவர்கள் Campus Interview-வில் select-ஆகி, பல்வேறு வேலைவாய்ப்புகள் பெற்றிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக வேண்டும் என்று அதிவேக Internet வசதிகளுடன் “முதல்வர் படைப்பகமும்” ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நான் சொன்னதெல்லாம் மிகவும் குறைவுதான். நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் திறந்து வைத்திருக்கிறோம். இன்னும் பல, நூற்றுக்கணக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த அளவிற்கு கொளத்தூரை develop செய்ய உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இது கொளத்தூருக்கு மட்டுமல்ல, இதேபோல, தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு ஊரிலும், இதுவரை நடக்காத அளவிற்கு முன்னேற்றப் பணிகளை செய்திருக்கிறோம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும், எங்கும் இல்லாத வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.
அதில் குறிப்பாக, பெண்களுடைய முன்னேற்றத்திற்கு அடிப்படையாக, அவர்களுக்குப் பொருளாதார அதிகாரத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உருவாக்கிய திட்டம் தான் 1 கோடியே 31 இலட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருகின்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.
பெண்கள் பணிகளுக்காக வெளியில் செல்வதற்கு அடுத்தவரை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடாது என்று உருவாக்கப்பட்டது தான் சுமார் 900 கோடி பயணங்களுக்கு மேல் மகளிர் பயன் பெற்றிருக்கக்கூடிய விடியல் பயணத் திட்டம்.
ஒரு பெண் கல்வி கற்றால், அந்த குடும்பத்தின் நான்கைந்து தலைமுறை உயரும் என்று பெண்கள் பட்டப்படிப்பு பெற, ஊக்கமளிக்க தொடங்கப்பட்ட திட்டம் தான் 6 இலட்சத்து 95 ஆயிரத்து 296 மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய “புதுமைப் பெண் திட்டம்”.
அதேபோல, அரசுப் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் பட்டப்படிப்பு படிப்பதற்கு 5 இலட்சத்து 40 ஆயிரத்து 511 மாணவர்களுக்கு துணை நிற்கக்கூடிய “தமிழ்ப் புதல்வன்” திட்டம்.
தொழில்நுட்பமும், வளர்ச்சியும் அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கவேண்ளடும் என்று “உலகம் உங்கள் கையில்” என்று 10 இலட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கியிருக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் Technology update-ஆகிக் கொண்டே இருக்கிறது. கல்லூரியில் படிக்கின்ற மாணவ, மாணவிகள் update-ஆகிக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களுக்கு Skill development ஏற்படுத்தவேண்டும் என்று உருவாக்கப்பட்டு, இதுவரைக்கும் 48 இலட்சத்து, 65 ஆயிரத்து 50 பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கக்கூடிய “நான் முதல்வன்” திட்டம்.
நம்முடைய குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு, அதுவும் பசியில்லாமல் படிக்கவேண்டும் என்பதற்காக, குடும்பத் தலைவிகளின் காலை நேர பணிச்சுமையை குறைப்பதற்கு, உருவாக்கப்பட்டது தான்
19 இலட்சத்து 34 ஆயிரம் குழந்தைகள் சூடாக, சுவையாக, சத்தாக சாப்பிடுகின்ற “காலை உணவுத் திட்டம்”.
இதுமட்டுமல்ல, உங்களுடன் ஸ்டாலின், நலன் காக்கும் ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, பாதம் காப்போம், இதயம் காப்போம், ஊட்டச் சத்தை உறுதி செய், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், தாயுமானவர், அன்புக்கரங்கள், அன்புச் சோலை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், தோழி விடுதிகள், மாற்றுத் திறனாளிகள் உரிமைத் திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடி நியமனம். சொல்லும்பொழுதே, எனக்கே tired-ஆகி விட்டது. மூச்சிறைக்கிறது.
தலமைச்சர் கோப்பை, அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், தொல்குடி திட்டம், டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கக்கூடிய திட்டம், பேராசிரியர் அன்பழகனார் கல்வி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் என்று என்னால் பெரிய பட்டியலையே தரமுடியும். இதுதான் திராவிட மாடல். திராவிட மாடல் என்ன? என்ன? என்று கேட்கிறார்களே! இதுதான் திராவிட மாடல்.
மக்களை மையப்படுத்தி, மக்களை தேடி வந்து சேவைகளை வழங்குகின்ற மக்களாட்சியாக திராவிட மாடல் பெயரெடுத்திருக்கிறது.
இந்த நல்லாட்சி தொடர, நம்முடைய கொளத்தூர் மேலும், மேலும் உயர, உங்களுடைய ஆதரவு என்றும் எங்களுக்கு இருக்கும்; இருக்கும் என்ற நம்பிக்கையோடு நான் விடைபெறுகிறேன்.

