*விரைவில் தீர்வுகாண மக்கள் கோரிக்கை
களக்காடு : களக்காடு அருகே தோப்பூர் இடுகாட்டில் அடிப்படை வசதியின்றி அவதிப்படும் மக்கள், விரைவில் தீர்வுகாண கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள தோப்பூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பட்டலியன மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு தோப்பூர் குளத்தின் தெற்கு கரையில் இடுகாடு உள்ளது. இறந்தவர்களில் உடல்களை இங்கு காலம்காலமாக அடக்கம் செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த இடுகாட்டில் நன்மை கூடம் இதுவரை அமைக்கப்படவில்லை.
இதேபோல் தண்ணீர் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை. இவ்வாறு இங்கு நன்மை கூடம் இல்லாத காரணத்தால் மழை நேரங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய செல்லும் போது, மழையில் நனைந்தும், வெயில் காலங்களில் வெயிலில் காய்ந்தும் செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகும் அவலம் தொடர்கிறது.
அத்துடன் தண்ணீர் வசதி இல்லாததால் பல கி.மீ தூரத்தில் இருந்து தண்ணீர் எடுத்து செல்ல வேண்டி உள்ளதாக மக்கள் வேதனையுடன் புகார் தெரிவித்தனர். எனவே இடுகாட்டில் நன்மை கூடம் கட்டுதல், ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்டு விரைவில் தீர்வுகாண முன்வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து தோப்பூரை சேர்ந்த பாபு கூறுகையில், ‘இடுகாட்டில் நன்மை கூடம் கட்டவும், தண்ணீர் வசதி ஏற்படுத்தவும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் மூலம் முறையீடு செய்துள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆதிதிராவிட நலத்துறை அதிகாரியிடமும் மனு கொடுத்தும் தீர்வு ஏற்படவில்லை. 4 தலைமுறையாக இந்த பிரச்னை நீடித்து வருகிறது. இனிமேலாவது இடுகாட்டில் நன்மை கூடம் கட்டவும், தண்ணீர் வசதி ஏற்படுத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.
