விட்டுவிட்டு பெய்த சாரல் மழை திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குலசேகரம் : குமரியின் சுற்றுலாத்தலங்களில் முக்கியமானது திற்பரப்பு அருவி. இங்கு மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் கோதையாறு அருவியாக விழுவதால் குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டி பயணிகளை மகிழ்விக்கிறது. இதனால் எல்லா நாட்களிலும் பயணிகள் வருகை காணப்படும். விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் மிகுதியாக காணப்படும்.

பருவ மழை ஓய்ந்த பின் சில வாரங்களாக குமரி மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயில் அக்கினி வெயிலை போன்று கொளுத்தி வருகிறது. மக்கள் நீர்நிலை சார்ந்த பகுதிகளை நாடி செல்வதால் திற்பரப்பு அருவியில் குளிக்கும் ஆர்வத்துடன் வரும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. தினமும் காலை முதல் பயணிகள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

விடுமுறை நாட்களில் கடும் கூட்ட நெரிசலில் திற்பரப்பு திணறுகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் கடந்த 2 நாள்களாக மதியத்துக்கு மேல் வானம் மழை மேகங்களால் இருண்டு கன மழை மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. இது வெயிலின் தாக்கத்தை குறைத்து உள்ளது.

திற்பரப்பில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. அவ்வப்போது வெயில் வந்துச் செல்லும் நிலை இருந்தது. மதியம் முதல் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. கடும் வெயிலின் சூட்டை தணிக்க குளிக்கும் ஆர்வத்துடன் வந்தவர்களுக்கு இது புதிய அனுபவமாக இருந்தது. அருவியில் சீரான அளவு தண்ணீர் எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து கொட்டுவதால் பயணிகள் தடையின்றி குளித்து மகிழ்ந்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அருவியில் பயணிகள் குளிக்கும் பகுதி, அருகில் உள்ள சிறுவர் நீச்சல் குளம், பூங்கா என எல்லா இடங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதே போல் திற்பரப்பு தடுப்பணையில் நடைபெறும் உல்லாச படகு சவாரியிலும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து ஆர்வமுடன் திற்பரப்பு தடுப்பணையில் கடல் போல் நிரம்பி வழியும் கோதையாற்றில் படகு சவாரி செய்து இயற்கை அழகை பார்த்து மகிழ்ந்தனர்.

Related Stories: