- உலகக் கோப்பை சூப்பர் 8
- தென் ஆப்பிரிக்கா
- அகமதாபாத்
- இந்தியா
- உலகக் கோப்பை டி20 சூப்பர் 8 சுற்று
- ஐ.சி.சி உலகக் கோப்பை டி 20
- இலங்கை
அகமதாபாத்: உலகக்கோப்பை டி20 சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி அபார வெற்றிபெற்றது. ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டிகள் இந்தியா, இலங்கை நாடுகளில் நடந்து வருகின்றன. லீக் சுற்றுகளில் நடந்த 40 போட்டிகளின் முடிவில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகள் தலா 4 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1ல் உள்ள இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையிலான முதல் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து தென் ஆப்ரிக்காவின் துவக்க வீரர்களாக கேப்டன் அய்டன் மார்க்ரம், குவின்டன்
டிகாக் களமிறங்கினர்.
போட்டியின் 2வது ஓவரை வீசிய அட்டகாசமாக வீசிய இந்திய நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா, குவின்டன் டிகாக்கை 6 ரன்னில் கிளீன் போல்டாக்கினார். அர்ஷ்தீப் சிங் வீசிய 3வது ஓவரில் கேப்டன் அய்டன் மார்க்ரம் வெறும் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பும்ரா வீசிய 4வது ஓவரின் கடைசி பந்தில் ரையான் ரிக்கெல்டன் (7 ரன்) பலியானார். 4 ஓவரில் 20 ரன்னுக்குள் முக்கியமான 3 பேட்டர்களை இழந்து தென் ஆப்ரிக்கா திணறியது.
இருப்பினும், அடுத்து இணை சேர்ந்த டெவால்ட் புரூவிஸ், டேவிட் மில்லர் இணை சிறப்பாக ஆடி 4வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் குவித்திருந்தபோது, புரூவிஸ் (45 ரன்) ஆட்டமிழந்தார். பின்னர், மில்லர் 63, மார்கோ யான்சன் 2, கோர்பின் பாஷ் 5 ரன்னில் அவுட்டாகினர். 20 ஓவரில் தெ.ஆ. 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்திருந்தது.
இதையடுத்து, களம் இறங்கிய இந்திய அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், தென் ஆப்ரிக்கா அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
