அகமதாபாத் : பெற்றோரின் சம்மதம் இல்லாமல், இனி பதிவு திருமணம் செய்ய முடியாது என குஜராத் சட்டசபையில் புதிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு, சட்டப்பேரவையில் திருமண பதிவு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த வரைவு சட்டத்தின் கீழ், பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்ய விரும்புவோர், இனி பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது என்ற விதி மாற்றப்பட உள்ளது.
தம்பதிகளின் வசிப்பிட எல்லைக்குட்பட்ட பதிவு அலுவலகங்களில் மட்டுமே திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. மதமாற்றத்தை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறும் குஜராத் பா.ஜ.க. அரசு, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. இதனிடையே காதல் திருமணங்களை தடுக்கவே இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
