திருவையாறு பைபாஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள்

*வாகன ஓட்டிகள் அச்சம்

வல்லம் : தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது பைபாஸ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 2 கட்டமாக பைபாஸ் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின.

தஞ்சை மேலவஸ்தாசாவடியில் இருந்து தொடங்கி மாதாக்கோட்டை, விளார், வழியாக புதுப்பட்டினம், பட்டுக்கோட்டை பிரிவு சாலை, மாரியம்மன்கோவில் சாலையில் உள்ள ரவுண்டானா, வெண்ணாறு பாலம், பள்ளியக்ரஹாரம் ரவுண்டானா, திருவையாறு பிரிவு சாலை, 8ம் நம்பர் கரம்பை, பிள்ளையார்பட்டி ரவுண்டானா வழியாக மாவட்ட எஸ்.பி. அலுவலகம் அருகே உள்ள திருச்சி சாலையில் நிறைவடையும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல் கட்டமாக மேலவஸ்தாசாவடியில் இருந்து பள்ளியக்ரஹாரம் ரவுண்டானா வரை ஒரு கட்டமாகவும், அங்கிருந்து தற்போது தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருச்சி சாலையில் இணைக்கும் வகையில் 2வது கட்டமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

திருச்சியில் இருந்து தஞ்சையை கடந்து செல்பவர்கள் தஞ்சை மாநகருக்குள் வந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல் இருக்கும் வகையில் இந்த பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை பணிகளும் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பைக்குகள், கார், சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் என்று இந்த பைபாஸ் சாலை வழியாக திருவையாறு மற்றும் கும்பகோணத்திற்கு செல்கின்றன.

இந்த பைபாஸ் சாலையில் 8 நம்பர் கரம்பை பகுதியில் ஒரு மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமான பைபாஸ் சாலையாக இருப்பதால் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில் இந்த சாலையில் வண்ணாரப்பேட்டை கல்லணைக்கால்வாய் ஆற்றுப்பாலம் பகுதியில் பொதுமக்கள் வளர்க்கும் மாடுகள் மேய்ச்சலுக்கு வருகின்றன. சில நேரங்களில் இந்த மாடுகள் பைபாஸ் சாலையில் திடீரென்று வாகனங்கள் வரும் போது கடக்கின்றன. மேலும் அதேபகுதியில் சுற்றியும் திரிகின்றன.

மேலும் ஒன்றுடன் ஒன்று சாலையிலேயே மோதிக் கொண்டு வாகனங்கள் குறுக்கே ஓடுவதால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே திருவையாறு பைபாஸ் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: