*அச்சத்துடன் குளிக்க செல்லும் மக்கள்
தஞ்சாவூர் : தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் படித்துறைகளில் வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள் சேதமடைந்துள்ளதால், அங்கு குளிப்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.கல்லணையிலிருந்து பிரிந்து செல்லும் கல்லணை கால்வாய் எனப்படும் புது ஆறு கடந்த 1934-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டது.
இந்த ஆறு மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளங்களுக்கு இந்த ஆற்றுநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஆற்றில் முன்பு விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
காலப்போக்கில் ஆற்றின் கரைகள் பலவீனமாக இருந்ததால் 3 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த ஆற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும்.
கடைமடைப் பகுதிக்கு விரைந்து தண்ணீர் செல்ல வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் மூலம் கல்லணைக் கால்வாய் ஆற்றை புனரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. இதில் ஏற்கனவே பல இடங்களில் ஆற்றில் உள்ள இரு கரைகளும், ஆற்றுக்குள்ளும் சிமெண்டு கான்கிரீட் மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி, ஆற்றின் இரு கரைகளும் சுத்தம் செய்யப்பட்டன. அதேபோல, ஆற்றில் தேங்கியுள்ள கழிவுநீர், குப்பை, மண்திட்டுகளும் அகற்றப்பட்டுன.இந்த நிலையில் தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் படித்துறையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு கம்பிகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது.
கம்பிகள் சேதமடைந்து உள்ளதால் அங்கு குளிப்பவர்கள் மிகவும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே ஆற்றுப்பாலம் பகுதி முதல் சாந்தபிள்ளை கேட் பகுதி வரை சேதமடைந்த தடுப்பு கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
