கோத்தகிரி : கோத்தகிரி அருகே உள்ள கேசலாடா அரசு பள்ளி மாணவர்கள் படிக்கும் பாடங்களையே உரையாடலாகவும் நாடகங்களாகவும் நடித்து அசத்தி வருகின்றனர்.கோத்தகிரி அருகே உள்ள கேசலாடா அரசு பள்ளியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திறன் கல்வி கற்று தரப்படுகிறது. இப்பள்ளியில் இருந்து கடந்த பத்து ஆண்டுகளாக சதுரங்க போட்டியில் மாவட்ட அளவிற்கும், மாநில அளவிற்கும் சென்றுள்ளனர்.
பள்ளியில் கடந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு பயின்ற மாணவி ஸ்ரீயக்ஷா மத்திர தொப்பி என்ற சிறுகதை நூலை எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் ஆசிரியர்கள் பள்ளியில் சதுரங்கம், அபாகஸ் கணிதம், ரூபிக் க்யூப் போன்ற பயிற்சிகள் அளித்து வருகின்றனர்.
குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிக்கு இணையாக ஆங்கிலம் பயின்று தங்கள் கல்வி கற்றதை நாடக வாயிலாகவும், உரையாடல் வாயிலாகவும் பேசி அசத்தி வருகின்றனர். மாணவர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்பட்டு சிறப்பு பயிற்சியினை அளித்து வருகிறார்.
