ஈரோடு, பிப்.21: திருப்பூர் மாவட்டம் நித்திய ஜீவபுரத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சித்ரா (36). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். சித்ரா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சூரியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இங்கு அடிக்கடி மது அருந்தி விட்டு வரும் சந்திரன், சித்ராவை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி மதுபோதையில் வந்த சந்திரன் மனைவி சித்ராவை அடித்துள்ளார். இதனால், மனமுடைந்த சித்ரா, திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாய் மாரி அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
