மணல் கடத்தல் வழக்கு அதிமுக மாஜி அமைச்சரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: கரூர் நீதிமன்றம் உத்தரவு

கரூர்: மணல் கடத்தல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரனின் முன் ஜாமீன் மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த முனியப்பனூர் காவிரி ஆற்றுக்கு கடந்த 11ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் வந்து, அங்கு மணல் அள்ளி கொண்டிருந்த லாரி மற்றும் 2 பொக்லைன், 5 மணல் அள்ளும் வாகனங்களை சிறைபிடித்தனர். தகவலறிந்ததும் மண்மங்கலம் தாசில்தார் சத்தியமூர்த்தி சென்று லாரி, இயந்திரங்களை கைப்பற்றினார். இதுதொடர்பாக வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

இந்நிலையில் கடந்த 12ம்தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு நெருங்கிய ஒருவர் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மணலை பறிமுதல் செய்ய வலியுறுத்தி 20 மாட்டு வண்டிகளுடன் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கடந்த 13ம்தேதி ஆண்டாங்கோவில் புதூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான இடத்தில் 12 யூனிட் ஆற்று மணல் கொட்டப்பட்டுள்ளது. அதை பறிமுதல் செய்யும்படி கரூர் நகர போலீசில் ஆண்டாங்கோவில் கிழக்கு விஏஓ சண்முகம் புகார் செய்தார். அதன்பேரில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது போலீசார் 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்தனர்.

மேலும் விஜயபாஸ்கர் வீட்டின் அருகே சாமியாத்தாள் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 100 யூனிட் மணலை சாமியாத்தாள் மருமகனும், ஆண்டாங்கோவில் புதூர் அதிமுக கிளை செயலாளருமான தனபால் ஆவணங்களின்றி கொட்டி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த 100 யூனிட் மணலை வருவாய்த்துறை மற்றும் கணிமவள துறையினர் பறிமுதல் செய்ததுடன் தனபால் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மணல் கடத்தல் வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன் கோரி கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் அதிமுக வக்கீல்கள் கடந்த 18ம்தேதி மனு தாக்கல் செய்தனர். அன்று மதியம் கரூர் கோர்ட்டில் மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என்று கூறி எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

Related Stories: