கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் 2028ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என ஒன்றிய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பயணிகள் வசதிகளுக்காக புதிதாக அமைக்கப்பட்ட மலிவு விலை சிற்றுண்டி உணவகம், புவிசார் குறியீடு பெற்ற கோவை கோரா காட்டன் ஆடை விற்பனை அங்காடி, பயணிகளின் குழந்தைகள் விளையாட்டு பகுதி மற்றும் நூலக, இணைய வசதி ஆகியவற்றை ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ஒன்றிய இணையமைச்சர்கள் முரளிதர் மொஹல், எல்.முருகன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.
பின்னர் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள விமான நிலையங்களில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வசதிகளை காணொலி காட்சி மூலம் அவர்கள் துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியதாவது: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக மாநில அரசு தற்போது நிலம் கையகப்படுத்திக் கொடுத்துள்ளது. நிலம் முழுமையாகக் கையகப்படுத்தப்பட்டவுடன் விரிவாக்கப் பணிகள் தொடங்கும். தற்போதுள்ள முனையம் 18,000 சதுர மீட்டர் மட்டுமே உள்ள நிலையில், புதிதாக அமையவுள்ள முனையம் 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இருக்கும். அடுத்த 20 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒன்றரை கோடி பயணிகள் பயணிக்கும் வகையில் இது அமையும். இதற்காக ஒன்றிய அரசு சார்பில் ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் சர்வதேச விமான சேவைகளை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்படும். வரும் 2028க்குள் கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் அனைத்தும் நிறைவடையும். இண்டிகோ நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டுப் போதுமான விமானிகள் நியமிக்கப்பட்டுள்ளதை அமைச்சகம் கண்காணித்து வருகிறது. நெய்வேலியில் பணிகள் முடிந்து உரிமத்திற்காகக் காத்திருக்கிறது. வேலூர் விமான நிலையப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஓசூர் விமான நிலையத்திற்கு பாதுகாப்புத் துறை இன்னும் அனுமதி வழங்கவில்லை. பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த 3 புதிய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை மட்டுமல்லாமல் பல்வேறு விமான நிலையங்களிலும் சர்வதேச விமான சேவைகள் வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
