வேலை செய்யாமல் அனைத்து புகழையும் பெறுகிறார் பிரதமர் மோடி: காங். விமர்சனம்

புதுடெல்லி: குழு திட்டத்தில் வேலை செய்யாமல் அனைத்து புகழையும் பெறும் மாணவர் போன்றவர் பிரதமர் மோடி என்று யூபிஐ விவகாரத்தில் காங்கிரஸ் அவரை விமர்சித்துள்ளது. பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஏஐ உச்சி மாநாட்டில் இந்தியாவின் யூபிஐ கட்டமைப்பை குறித்து நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையிலான அரசை வெகுவாக பாராட்டி இருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இதனை விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடக த்துறை தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் தள பதிவில்,”ஒரு குழு திட்டத்தில் வகுப்பு தோழர் எந்த வேலையையும் செய்யவில்லை. ஆனால் அனைத்துப் பெருமையையும் ஏற்றுக்கொள்கிறார் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்கிறோம். அது பிரதமர் மோடி.

இந்தியாவில் யூபிஐ உள்கட்டமைப்பை பாருங்கள் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பாராட்டினார். யூபிஐயின் ஆரம்ப கருத்தாக்கம் 2012-2013ம் ஆண்டில் அப்போதைய இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவரான நந்தன் நிலேகனி தலைமையிலான குழுவின் கீழ் நடந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசினால் நியமிக்கப்பட்ட குழு 2013ம்ஆண்டு டிசம்பரில் மொபைல் அடிப்படையிலான டிஜிட்டல் கட்டணம் உள்கட்டமைப்பை பரிந்துரைத்தது. புதுமையான யோசனைகளைப் பற்றி சிந்திக்கும் திறன் இல்லாத பிரதமர் மோடி, ரிப்பன்களை வெட்டுவது, அபத்தமான சுருக்கெழுத்துக்களைப் பேசுவது, காங்கிரஸ் கட்சியை சபிப்பது மற்றும் பெருமையை திருடுவதில் மகிழ்ச்சி அடைகிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: