செல்ல நாயை அடித்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: அடிதடி களேபரத்தில் பலரின் மண்டை உடைப்பு

பதேபூர்: உபியில் செல்ல நாயை அடித்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் காகா கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் கடந்த புதன்கிழமை சுமித் கேஷர்வானி என்ற மணமகனுக்கும், அவரது காதலிக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதற்காக மணமகளின் குடும்பத்தினர் பிரயாக்ராஜிலிருந்து பதேபூருக்கு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் வந்திருந்தனர். மணமகன் தரப்பு பாரம்பரிய திருமண ஊர்வலத்துடன் அந்த இடத்தை அடைந்தது. மாலை மாற்றுதல் உள்ளிட்ட ஆரம்ப விழாக்கள் அமைதியாக நிறைவடைந்தன. தாலி கட்டும் தினத்தில் அதிகாலையில் பதற்றங்கள் அதிகரித்தன.

அதிகாலை 4 மணியளவில், திருமண பீடத்தில் நகைகள் வழங்கும் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, ​​மணமேடை அருகே கட்டப்பட்டு இருந்த மணமகளின் வளர்ப்பு நாய் குரைக்கத் தொடங்கியது. இதனால் எரிச்சல் அடைந்த மணமகன் தரப்பு இளைஞன் அந்த நாயை அடித்தான். இதைப்பார்த்த மணமகள், அவரது குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள். உடனே மோதல் வெடித்தது. இருதரப்பினரும் கம்புகள், நாற்காலிகளால் தாக்கிக்கொண்டனர். இதில் பலரது மண்டை உடைக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற போலீசார் மோதலை விலக்கினர். அதன்பின் போலீசார் நடத்திய விசாரணையில் மணமகள் இனி திருமணத்தைத் தொடர விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து திருமணம் நின்றது. இருதரப்பிலும் வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் திருப்பித் தரப்பட்டன. இந்த மோதல் தற்போது ஆன்லைனில் வைரலாகி வருகிறது.

Related Stories: