வெறுப்பை விதைக்கும் ‘தி கேரளா ஸ்டோரி-2’: காங்கிரஸ் எம்பி சசி தரூர் கண்டனம்

புதுடெல்லி: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தனது வன்மையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். கடந்த சில ஆண்டுக்கு முன் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ முதல் பாகம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும் சமூக ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. முந்தைய திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ஒரு குறிப்பிட்ட தரப்பினரை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாக கூறி பலத்த எதிர்ப்புகள் கிளம்பின.

இத்தகைய சூழலில், தற்போது தயாராகி வரும் ‘தி கேரளா ஸ்டோரி 2’ திரைப்படமும் அத்தகைய சர்ச்சைக்குரிய மற்றும் ஆதாரமற்ற கருத்துக்களையே கொண்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. இதுகுறித்து திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கூறுகையில், ‘இந்த திரைப்படம் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் மதமாற்றம் செய்யப்படுவதாக இதில் காட்டப்படுவது முற்றிலும் பொய்யான பிரசாரமாகும். உண்மையில் இத்தகைய சம்பவங்கள் மிகக் குறைவாகவே நடக்கின்றன. இப்படம் சமூகத்தில் பிரிவினைவாதத்தை மட்டுமே ஏற்படுத்தும். எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி வெறுப்பை விதைக்கும் இத்திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்’ என்றார்.

Related Stories: