*அரசு மருத்துவர் தகவல்
பந்தலூர்: காசநோய்க்கு சிகிச்சை எடுக்காவிட்டால் உடலின் மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் என்றும், காசநோய்க்கு அரசு மருத்துவமனையில் இலவச பரிசோதனை நடப்பதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன் ஆகியன சார்பில் பந்தலூர் அருகே உள்ள உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தார்.
உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிரவின் பேசும்போது, ‘‘காசநோய் என்பது மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குலோசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றுநோய்.
இது பொதுவாக நுரையீரலை பாதிக்கிறது.
ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் இதனை தொடர் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். தொடர்ந்து சிகிச்சை எடுக்காத பட்சத்தில் உடலில் மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும். காசநோய்க்கு அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார். இதில், செவிலியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நெல்லியாளம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தூய்மை பணி களப்பணி உதவியாளர் மலர்க்கொடி தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது, ‘‘காசநோய் காற்றின் மூலம் பரவும் ஒரு தொற்றுநோய் ஆகும். காசநோய் உள்ளவர் இருமும்போதும், தும்மும்போது காற்றில் பரவும். காசநோய் உள்ளவரின் உமிழ்நீர் அல்லது சளி தொடுவதன் மூலம் பாக்டீரியா அடுத்தவர் உடலுக்கு பரவும்.
காசநோயின் பாதிக்கப்பட்டால் 3 வாரங்களுக்கு மேல் தொடர் சளி, காய்ச்சல், எடை குறைதல், நுரையீரலில் இருந்து சளிக்கட்டு, ரத்தம் வடிதல் அறிகுறிகள் தோன்றும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து கண்டறியலாம்.
காசநோய்க்கு அரசு மருத்துவமனை மூலம் 6-9 மாதங்கள் தொடர் மருந்துகள் வழங்கப்படும். அதுபோல் தீவிர பாதிப்புக்கு காசநோய் தடுப்பூசி போடப்படுகிறது. தயக்கமின்றி காசநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
