*காட்டுத்தீ ஏற்பட்டால் இணைந்து செயல்பட முடிவு
ஊட்டி : முக்கூருத்தி தேசிய பூங்காவில் தமிழ்நாடு-கேரள எல்லை பகுதிகளில் தமிழ்நாடு மற்றும் கேரளா வனத்துறையினர் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், முக்கூருத்தி தேசிய பூங்கா 78.4 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு அழியும் பட்டியலில் உள்ள வரையாடுகள், புலிகள், யானை, சிறுத்தை, காட்டுமாடு, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகளும், புல்வெளிகளும் உள்ளன.
இப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் முக்கூருத்தியில் வனவிலங்குகள் நடமாட்டம், அந்நிய நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து கண்டறிய அடிக்கடி தமிழ்நாடு-கேரளா வனத்துறையினர் இணைந்து அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபடுவது வாடிக்கை.
இந்நிலையில் முக்கூருத்தி வனச்சரகர் யுவராஜ்குமார் தலைமையில் வனச்சரக பணியாளர்கள் மற்றும் கேரளா மாநிலத்தின் சைலண்ட் வேலி தேசிய பூங்கா கட்டுப்பாட்டிலுள்ள பவானி வனச்சரக பணியாளர்கள் இணைந்து வன பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இரு மாநில எல்லை வனப்பகுதியில் கூட்டு ரோந்து மேற்கொண்டனர்.
மேலும், தற்போது மழை சீசன் நிறைவடைந்துள்ள நிலையில் இனிவரும் மாதங்களில் பனிப்பொழிவு மற்றும் வெயிலான காலநிலை நிலவும். இதனால் செடி கொடிகள் காய்ந்து விடும் என்பதால் வனத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. முக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் சைலன்ட்வேலி தேசிய பூங்கா வனப்பகுதிகளில் வனத் தீத்தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டு கள தணிக்கை மேறகொள்ளப்பட்டது.
காட்டுத்தீ ஏற்படும் பட்சத்தில் இரு மாநில வனத்துறையினரும் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. முக்கூருத்தி வனப்பகுதியில் அத்துமீறி அந்நியர்கள், தனி நபர்கள் நுழைந்தால் வன சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டது.
