ஈரோடு மேட்டூர் ரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கம்பிகள்

ஈரோடு : ஈரோடு நகரில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஈரோடு நகரின் இதய பகுதியாக இருப்பது மேட்டூர் ரோடு.நகரின் மிக முக்கியமான சாலைகளில் ஒன்றான இதில், தினமும் பல ஆயிரக்கணக்கான கார்கள்,பைக்குகள்,ஆட்டோக்கள் மற்றும் லாரிகள்,சென்று வருகின்றன.

இந்த ரோட்டின் நடுவில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பரிமளம் காம்ப்ளக்ஸ் அருகிலும், அதை தொடர்ந்து, மெர்குரி டீ ஸ்டால் அருகிலும் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் சாலைகளை கடந்து செல்லும் வகையில் தடுப்புகள் வைக்கப்படாமல் உள்ளது.

இதில், மெர்குரி டீஸ்டால் அருகில் உள்ள பிரிவில்,அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து வரும் வாகனங்கள் அகில்மேடு வீதிக்கு செல்ல திரும்பும் இடத்தில் சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்பின் அருகில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு ஆங்கிளில் இரண்டு கம்பிகள் வெளிப்புறமாக நீட்டிக் கொண்டுள்ளன.

இது வலது புறமாக திரும்பும் வாகன ஓட்டிகளின் கால்களில் கிழித்து ரத்த காயத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அந்த கம்பிகள் நீட்டிக் கொண்டிருப்பது தெரியாததால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

அதேபோல, சரக்கு ஆட்டோக்கள், பயணிகள் ஆட்டோக்கள்,கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் திரும்பும் போது அவற்றின் பக்கவாட்டில் அந்த கம்பிகள் குத்தி வாகனங்களில் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.நேற்று காலையில் அந்த வழியாக திரும்பிய சரக்கு வாகனம் ஒன்றின் டயரில் அந்த கம்பி குத்தி மேற்கொண்டு அந்த வாகனம் செல்ல முடியாமல் நின்றது. பின்னர் ஓட்டுனர் பின்னோக்கி வாகனத்தை இயக்கி எடுத்து சென்றார்.

அதேபோல, கார் ஒன்று திரும்பும் போது அதன் பின்புறத்தில் அந்த கம்பி குத்தி விலை உயர்ந்த காரில் சேதத்தை ஏற்படுத்தியது. பல மாதங்களாக இவ்வாறு வாகன ஓட்டிகளுக்கும், வாகனங்களுக்கும் சேதம் ஏற்படுத்தி வரும் அந்த கம்பிகளால் ஏதேனும் பெரும் அசம்பாதவிம் ஏற்படும் முன்னர் உடனடியாக அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: