*தஞ்சாவூர் அருகே பரபரப்பு
திருக்காட்டுப்பள்ளி : சிறுவனை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் தஞ்சாவூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி வளப்பக்குடியை சேர்ந்தவர் காட்டுராஜா (35). இவரது மனைவி பாப்பாயி(30). இவர்களது மகன் சசிகுமார் (7).
குடும்பத்தகராறில் கணவர் காட்டுராஜா பிரிந்து சென்றதால் பாப்பாயி தனது மகனுடன் அதே பகுதியில் உள்ள தனது சசோதரர் ராஜாவுடன் வசித்து வருகிறார். தூய்மை பணியாளரான இருவரும் திருக்காட்டுப்பள்ளி நீர்வளத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சசிக்குமார் நேற்று காலை கண் விழித்ததும் தாயை பார்ப்பதற்காக காவிரி படித்துறை நோக்கி நடந்து சென்றான். அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய் ஒன்று, சசிக்குமாரை துரத்தி துரத்தி கடித்து குதறியது.
இதில் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து நாயை விரட்டி விட்டதுடன் ரத்த காயத்துடன் கிடந்த சசிக்குமாரை திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
