சூலூர் சிக்னலில் அடுத்தடுத்து 5 வாகனம் மோதி விபத்து

*அப்பளம் போல் நொறுங்கிய சொகுசு கார்

சூலூர் : கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பைபாஸ் சாலை சிக்னலில் 5 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதிய விபத்தில் சொகுசு கார் அப்பளம் போல் நொறுங்கியது.கேரளாவில் இருந்து டேங்கர் லாரி ஒன்று நேற்று முன்தினம் மாலை சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அதன் பின்னால் விலை உயர்ந்த சொகுசு கார் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியை டிரைவர் பைபாஸ் சிக்னலில் திடீரென பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார்.

உடனடியாக, பின்னால் சென்ற சொகுசு கார் பிரேக் அடித்து நிறுத்திய நிலையிலும் காருக்கு பின்னால் வந்த குஜராத் செல்லும் மற்றொரு லாரி காரின் பின் பகுதியில் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் முன்பு நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

மேலும், லாரிக்கு பின்னால் வந்த இரண்டு வாகனங்கள் ஒன்றன்பின் மற்றொன்று மோதி விபத்துக்குள்ளாயின. கார் முற்றிலும் சேதமடைந்த நிலையில் சொகுசு காரின் ஏர்பேக் ஓபன் ஆகவில்லை. இருந்தும் அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் உயிர் தப்பினார்.

இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து நடந்த சம்பவத்தால் சூலூர் பைபாஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: