சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு தமிழக – ஆந்திர எல்லையில் கலெக்டர், எஸ்பி திடீர் ஆய்வு

*சிசிடிவி பொருத்தி கண்காணிக்க உத்தரவு

ஜோலார்பேட்டை : சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியில் தமிழக-ஆந்திர எல்லை சோதனை சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு போலீசார் சுழற்சி முறையில் இரவு பகலாக தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் வாகனங்களையும், ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும் வாகனங்களையும் சோதனை செய்து கடத்தல் உள்ளிட்ட விரோத செயலில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்பேரில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கொத்தூர் பகுதியில் உள்ள தமிழக-ஆந்திர சோதனை சாவடியில் நேற்று கலெக்டர் சிவசவுந்திரவல்லி, எஸ்பி சியாமளாதேவி ஆகியோர் பாதுகாப்பு பணிகள் குறித்து திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது சோதனை சாவடி மைய பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா செயல்பாடுகள் குறித்தும் அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து சோதனை சாவடி மையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆந்திர எல்லை பார்டர் பகுதியில் ஆந்திர மாநிலம் குப்பம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தமிழக எல்லை நோக்கி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை போன்று, தமிழக எல்லையில் இருந்து ஆந்திர செல்லும் சாலையிலும் சிசிடிவி பொருத்த கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் ஆலோசனை செய்தனர்.

தொடர்ந்த அப்பகுதியிலும் சாதனை சாவடி மையம் அமைந்துள்ள பகுதிகளும் கூடுதலாக சிசிடிவி கேமரா பொருத்தவும், தமிழக எல்லை பகுதியில் சர்வே கல்லை அளவீடு செய்து அதற்கு வண்ணம் தீட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.

தேர்தலை முன்னிட்டு மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனங்களையும், உள்ளே வரும் வாகனங்களையும் தீவிரமாக கண்காணித்து வாகனங்களை சோதனை செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், சோதனை சாவடி மையத்தில் இரவு பகலாக போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அங்குள்ள போலீசாருக்கு அறிவுறுத்தினர்.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து எல்லைப் பகுதியில் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் ஏற்படாதவாறு பாதுகாப்பை உறுதி செய்யப்பட வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வின்போது நாட்றம்பள்ளி தாசில்தார் காஞ்சனா, தொகுதி தேர்தல் அலுவலர் முருகன், இன்ஸ்பெக்டர் மூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் தீர்த்தகிரி உள்ளிட்ட காவல் துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: