புதுடெல்லி: சமூக நீதி என்ற காரணத்தை அடிப்படையாக கொண்டு இலவசங்கள் வழங்குவதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மின்சார திருத்த விதிகள் 2024ல் உள்ள சட்ட விதி 23ல் ஒவ்வொரு மின்வாரியத்தின் மதிப்பிடப்பட்ட ஆண்டு வருவாய்க்கும், அதேப்போன்று வருவாய் தேவைக்கும் இடையில் எந்த இடைவெளியும் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த விகாரத்தில் குறிப்பிட்ட சட்ட விதியை நீக்கக்கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாடு மின் விநியோக கழகத்தின் தரப்பில் தாக்கல் செய்திருந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாடு முழுவதும் உள்ள மாநில அரசுக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் பல்வேறு முக்கிய கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதையடுத்து அவர் கூறியதில்,\\”இலவச மின்சாரம் என்பதை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பெரிய அளவில் கொடுத்து வருகிறீர்கள். குறிப்பாக மின்சார கட்டணம் செலுத்துவதற்கு வசதி உள்ளவர்கள் கூட இந்த இலவச மின்சாரத்தை பெறுகிறார்கள். இதற்காக அரசு தான் பணத்தை வீணாக செலவழிக்கிறது. அந்த பணத்தை வைத்து நீங்கள் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்டவற்றை கட்டி உண்மையான ஏழைகளுக்கு பலன்களை கொடுக்கலாம். நாடு முழுவதும் அனைத்து இடங்களிலுமே இதேப்போன்ற சூழல் நிலவுவது எங்களுக்கு மிகவும் வருத்தைத்தை அளிக்கிறது.
இலவசம் என்ற பெயரில் நாம் என்ன மாதிரியான கலாச்சாரத்தை வளர்த்து வருகிறோம் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. குறிப்பாக பணம் செலுத்தக் கூடியவர்களுக்கும், முடியாதவர்களுக்கும் இடையில் வேறுபாட்டை காட்டாமல், விநியோகிக்க தொடங்குவது என்பது ஒரு வகையான சமாதானப்படுத்தும் கொள்கையாக இந்த இலவசங்கள் இருக்கிறது. இந்த விவகாரத்தில் எங்களது இந்த கருத்து என்பது தமிழ்நாட்டை மட்டும் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை.ஒட்டுமொத்த மாநில அரசுகளுக்கும் இது பொருந்தக் கூடியதாகும். மேலும் நாடு முழுவதும் இருந்த பிரச்சனையை களைவது என்பது உச்ச நீதிமன்றத்தின் முக்கியத்துவமாக இருக்கிறது.
நீங்கள் வருவாய் உபரி மாநிலமாக இருந்தாலும், ஒட்டுமொத்த பொதுமக்களின் உள்கட்டமைப்பு, மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகளை மேம்படுத்துவதற்காக அந்தத் தொகையை மேம்பாட்டுக்காகச் செலவிடுவது உங்கள் கடமையல்லவா? அதற்குப் பதிலாக, தேர்தல் நேரத்தில் பொருட்களை விநியோகித்துக் கொண்டே இருக்கிறீர்களா? என்பது புரியவில்லை.சிலரால் கல்வி கற்க முடியாதது புரிந்துகொள்ளத்தக்கது. கல்வி கற்க முடியாத குழந்தைகள் இருக்கிறார்கள், ஆனால் அரசு தான் கல்வி கற்பிக்க வேண்டும். அது மாநிலங்களின் கடமை. ஆனால், அனுபவிக்கக்கூடியவர்கள் எல்லா வழிகளிலும் வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
எனவே இந்த விவகாரத்தில் கொள்கை கட்டமைப்புகளை மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் எங்கள் கவலை என்னவென்றால், மாநிலங்கள் பற்றாக்குறையில் இயங்கி வருகின்றன, இன்னும் மக்களுக்கு இவ்வளவு வகையான பணத்தை விநியோகிக்கின்றன. அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? அதை ஏன் வளர்ச்சி நோக்கங்களுக்காக அர்ப்பணிக்கக் கூடாது. சாலைகள், நீர்ப்பாசனம், மின்சாரம் என நீங்கள் விரும்பும் எதற்கும் நீண்டகாலத் திட்டத்தை செய்து வைக்கலாம்.
மேலும் சமூக நீதி என்ற காரணத்தை அடிப்படையாக இலவசங்கள் வழங்கப்படுவதாக அரசுகள் கூறுவதை ஏற்க முடியாது. குறிப்பாக ஒரு வருடத்தில் கிடைக்கப்பெறும் வருவாயில் சுமார் 25 சதவீதம் இலவச திட்டங்களுக்காக செலவிடப்படுவதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருகிறது. எனவே இலவசங்களுக்கான நிதி எப்படி பெறப்படுகிறது என்ற விளக்கத்தை பிரமாண பத்திரமாக ஒன்றிய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்ட நீதிபதிகள் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
* மக்கள் எப்படி வேலை செய்வார்கள்?
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறும்போது,’ இலவசங்களை தவிர்த்து மக்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிகளை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். இதனால் அவர்கள் தங்கள் கண்ணியத்தையும், சுயமரியாதையையும், சம்பாதிக்கவும், பராமரிக்கவும் முடியும். காலையிலிருந்தே இலவச உணவு, இலவச எரிவாயு, இலவச மின்சாரம் ஆகியவற்றை வழங்கத் தொடங்கப்படுகிறது. அதேப்போன்று நேரடியாகக் வங்கி கணக்கிலேயே பணத்தை மாற்றுகிறீர்கள். இதையடுத்து மக்கள் ஏன் வேலை செய்ய வேண்டும்?. ஒரே இடத்தில் இருந்து நான் அனைத்தையும் பெறுவேன் என்று அவர்கள் அறிந்திருக்கும்போது, அவர்கள் எங்கிருந்து வேலையைக் கற்றுக்கொள்ளப் போகிறார்கள். இத்தகை செயல்பாடுகள் என்பது தேச கட்டுமானம் ஒன்றும் கிடையாது என்பதை மாநில அரசுகள் புரிந்துக்கொள்ள வேண்டும்’ என்றனர்.
* நாட்டின் வளர்ச்சிக்கு தடை
நீதிபதிகள் கூறுகையில்,’ மக்கள் கொஞ்சம் ஒழுக்கத்தையும் தங்கள் உயிரையும் காப்பாற்றிக் கொள்ளும் உணர்வையும் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஒரு பெரிய நில உரிமையாளராக இருந்தாலும் கூட மின்சாரம் வழங்குவதற்கு முன்பே எல்லாம் வழங்கப்படும் மாநிலங்களை நாங்கள் அறிவோம். அது வரி செலுத்துவோரின் பணம். நீங்கள் ஏதேனும் ஒரு திட்டத்தில் இருக்கும் பணத்தை எடுத்து கொடுக்கிறீர்கள். ஏன் திடீரென்று இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் செயல்படுத்தப்படுகின்றன. அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், சித்தாந்தங்கள் மற்றும் அனைத்து சமூகப் பொறியாளர்களும் எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமாக தற்போது உள்ளது. இதுபோன்ற அளவிலான விநியோகத்தை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக நாமே இருப்போம் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை’ என்றனர்.
