சென்னை: ஜோதிமணி எம்பியை அவதூறாக பேசிய பாஜ பிரமுகர் மீது தாம்பரம் மாமன்ற உறுப்பினர் மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்தார். கரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் செந்தில்நாதன், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பற்றி அவதூறாக பேசினார். அவரது பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பல்வேறு காவல் நிலையங்களில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி, 64வது வார்டு, காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ஷகிலா ஜான்சி மேரி சென்னையில் உள்ள மகளிர் ஆணையத்தில் அதன் தலைவர் குமாரியை சந்தித்து, செந்தில்நாதன் மீது புகார் அளித்துள்ளார்.
அதில், காங்கிரஸ் பெண் எம்பி ஜோதிமணி மற்றும் தலைவர் ராகுல் காந்தி குறித்து அவதூறாக பேசிய மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட மகளிர் ஆணைய தலைவர் குமாரி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
