தமிழ்நாடு-புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு-புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் மார்ச் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நடைபெற உள்ள தமிழ்நாடு – புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் நாளை முதல் மார்ச் 2ம் தேதி திங்கட்கிழமை வரை தலைமை கழகத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தமிழ்நாடு-புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்ப கட்டணம் பொது தொகுதிக்கு ரூ.25,000, மகளிர்க்கு மற்றும் தனி தொகுதிக்கு ரூ.15,000. வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமை கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்ப கட்டணம் பின்னர் திருப்பி தரப்படும். விண்ணப்ப படிவம் தலைமை கழகத்தில் ரூ.1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: