சேலம், பிப்.19: சேலம் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுப்பன்றியை வேட்டையாடி கறியை விற்ற 5பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் தெற்கு வனச்சரகத்திற்குட்பட்ட தேக்கம்பட்டி மாமாங்கம் பகுதியில் காட்டு பன்றி கறி விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் அங்கு ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி 2பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒருவரின் பையை சோதனை செய்தபோது காட்டுபன்றி கறி இருந்ததும், பன்றியை வேட்டையாடி விற்பனைக்காக எடுத்து வந்ததும், மற்றொருவர் அந்த பன்றி கறியை வாங்க வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் காட்டு பன்றி இறைச்சியை பறிமுதல் செய்த வனத்துறையினர் காட்டு பன்றியை விற்றவருக்கு ரூ.50ஆயிரம், வாங்க வந்தவருக்கு ரூ.25ஆயிரம் என மொத்தம் ரூ.75ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் சங்ககிரி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி நின்ற 3பேரிடம் விசாரித்தனர், அதில் ஒருவர் காட்டு பன்றியை வேட்டையாடியதும், மற்ற இருவர் கறியை வாங்க வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்களுக்கு மொத்தம் ரூ.80ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
