பந்தலூர்: பந்தலூர் அருகே சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட உப்பட்டி மேஸ்திரிகுன்னு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேஸ்திரிகுன்னு பகுதிக்கு உப்பட்டியில் இருந்து செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்ல முடிவதில்லை. இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்லமுடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும் பழுதடைந்த சாலையை சீரமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் உப்பட்டியில் இருந்து பொன்னானி செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் நெல்லியாளம் நகராட்சி பொறியாளர் விஜயராஜ் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்தனர். இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் உப்பட்டி-பொன்னானி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
