கண்காட்சியாளர்கள் உணவு, தண்ணீர் இன்றி தவிப்பு; ஏஐ தாக்க மாநாட்டில் ஏற்பாடுகள் மோசம்: லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது, பகிரங்க மன்னிப்பு கேட்டார் ஒன்றிய அமைச்சர்

புதுடெல்லி: டெல்லியில் நடக்கும் உலகின் மிகப்பெரிய ஏஐ தாக்க மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் குளறுபாடு ஏற்பட்டதால் கண்காட்சியாளர்கள், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள், பார்வையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பலர் உணவு, குடிநீர் இன்றி தவித்தனர். லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதால் கண்காட்சி நடத்த வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்ற மோசமான ஏற்பாட்டிற்காக ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கி வரும் 20ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இதில், ஏஐ தாக்க கண்காட்சியும் நடந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ஏஐ கண்காட்சியான இதில் 600க்கும் மேற்பட்ட உயர் திறன் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

70,000 சதுர மீட்டர் பரப்பளவில் 300 கண்காட்சி பெவிலியன்கள் அமைக்கப்பட்டு, ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, செர்பியா, எஸ்டோனியா, தஜிகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

இந்த கண்காட்சியை நேற்று முன்தினம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘இந்திய ஏஐ தாக்க கண்காட்சியானது, கருத்துக்கள், புதுமைகள் மற்றும் நோக்கங்களின் சக்திவாய்ந்த ஒருங்கிணைப்பு. உலகளாவிய நன்மைக்காக செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்திய திறமைகளின் அசாதாரண திறனை இது வெளிப்படுத்துகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, மனித முன்னேற்றத்திற்காக ஏஐ தொழில்நுட்பத்தை பொறுப்புடன், அனைவரையும் உள்ளடக்கியதாக பயன்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த கண்காட்சி மீண்டும் உறுதிப்படுத்தியது’’ என கூறி உள்ளார். இதுதவிர, ஏஐ தாக்க மாநாட்டில் பல்வேறு அமர்வுகளில் ஒன்றிய அமைச்சர்கள் பலர் நேற்று உரையாற்றினர்.

ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் பொது சுகாதாரத்துறையில் ஏஐ குறித்து பேசுகையில், ‘‘உலகத் தரம் வாய்ந்த ஏஐ நிபுணத்துவத்தை பொது சுகாதார விநியோகத்தில் ஒருங்கிணைக்க டெல்லி எய்ம்ஸ், பிஜிஎம்இஆர் சண்டிகர் மற்றும் ரிஷிகேஷில் 3 ஏஐ மையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார். ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘டீப்பேக்குகள் போன்ற ஏஐகளின் தவறான பயன்பாடு பிரச்னை வேகமாக அதிகரித்து வருகிறது.

எனவே குழந்தைகள், சமூகத்தை பாதுகாக்க சர்வதேச அளவில் இன்னும் வலுவான கட்டுப்பாடுகள் தேவை. ’’ என வலியுறுத்தினார். ஏஐ 5வது தொழிற்புரட்சியாக இருக்கும் என்றும் அடுத்த 2 ஆண்டுகளில் இத்துறையில் 200 பில்லியன் முதலீடு ஈர்ப்பதை இந்தியா இலக்காக கொண்டிருப்பதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். முன்னதாக, மாநாட்டின் முதல் நாளான நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஏற்பாட்டில் பெரும் குழப்பம் நிலவியதால் ஏஐ தாக்க மாநாட்டிற்கு வந்த ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள், சர்வதேச பிரதிநிதிகள் பெரும் சிரமங்களை சந்தித்தனர்.

பாதுகாப்பு காரணங்களை காட்டி நீண்ட நேர சோதனைகள் நடந்ததால் அரங்க நுழைவாயிலில் நீண்ட வரிசையில் கூட்டம் நின்றது. அரங்கிற்குள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் முறையாக செய்யப்படவில்லை. பலர் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்தனர். பல அரங்குகளில் இருந்த லேப்டாப் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் திருடு போனதாகவும் ஸ்டார்ட்அப் நிறுவன பிரதிநிதிகள் புலம்பினர்.

பாதுகாப்பு காரணம் காட்டி சில நிறுவனங்கள் அவர்களின் ஏஐ தயாரிப்புகள் காட்சிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெரும் செலவு செய்து வந்த அவர்கள் விரக்தியுடன் திரும்பினர். இதுபோன்ற அசவுகரியங்களுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்பதாக ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

* பில் கேட்ஸ் பங்கேற்பதில் குழப்பம்
ஏஐ தாக்க உச்சி மாநாட்டின் கடைசி 2 நாட்களில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் ஜாம்பவான்கள் உரையாற்ற உள்ளனர். அதில், அந்தந்த நிறுவனங்களின் ஏஐ எதிர்கால திட்டங்கள் குறித்து விவரிக்கப்பட உள்ளது. இதில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பங்கேற்க மாட்டார் என ஒன்றிய அரசு தரப்பில் நேற்று தகவல்கள் வெளியாகின. அதே சமயம், ஆந்திரா வந்துள்ள பில்கேட்ஸ், ஏஐ மாநாட்டில் உரையாற்றுவார் என அவரது அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பில் கேட்ஸ் பங்கேற்பில் குழப்பம் நிலவுகிறது.

* இந்தியாவுக்கு அவமானம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘‘இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் ஏஐ திறன்களை நிரூபிக்கும் ஒரு கண்காட்சி ஏஐ உச்சிமாநாடு. ஆனால் இந்த விளம்பர பசியுள்ள ஒன்றிய அரசு முழுமையான குழப்பமாகவும் தவறான நிகழ்ச்சி ஏற்பாட்டாகவும் மாற்றி இருக்கிறது.

மாநாட்டின் முதல் நாளிலேயே பிரதமர் மோடி புகைப்பட வாய்ப்புக்காக அவசரமாகச் சென்றதால் நிறுவனர்கள், கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மிகுந்த துயரத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கண்காட்சியாளர்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவிக்க விடப்பட்டனர். அவர்களின் பொருட்கள் திருடப்பட்டுள்ளன. பாஜ அரசின் திறமையின்மையால் நமது நாடு உலகளாவிய அவமானத்தை அனுபவிக்க வேண்டியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது’’ என்றார்.

* ஏஐயில் ரூ.9 லட்சம் கோடி அதானி குழுமம் முதலீடு
அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘2035ம் ஆண்டிற்குள் பசுமை ஆற்றல் மூலம் இயங்கக் கூடிய, ஏஐ தொழில்நுட்பத்திற்கு தயார் நிலையில் உள்ள தரவு மையங்களை உருவாக்கட 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 லட்சம் கோடி) முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.

இது அடுத்த 10 ஆண்டுகளில் சர்வர் தயாரிப்பு, செமி கண்டக்டர் மற்றும் கிளவுட் தளங்கள் உள்ளிட்ட இதர துறைகளில் கூடுதலாக 150 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்க்கும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 250 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏஐ உள்கட்டமைப்பு இந்தியாவில் உருவாகும்’ என கூறி உள்ளது.

Related Stories: