விழுதுகள் பரப்பி ஓங்கி வளர்ந்திருக்கும் சைவ சமயத்தின் ஆல விருட்சங்களாக விளங்கியவர்களே அப்பர் அடிகளும், ஞானசம்மந்தப் பெருமானும். இவ்விரு அடியார்கள் நெகிழ்ந்து உருகி சந்தித்த தலமே திருவாலம்பொழிலாகும். பகிர்ந்து கொண்டதென்னவோ அன்புதான். ஆனால், சுற்றி நின்ற அடியார்களுக்கு கிடைத்தது ஈசனின் அருட்பொழிவு. ‘அப்பா’ என பிள்ளை தந்தையை அழைப்பது போல, இந்த ஞானசம்மந்தக் குழந்தை ‘அப்பரே’ என மரியாதையும், அன்பும் கலக்க அழைத்தது. ஆஹா… என்னை இப்படி அழைக்கிறதே. இந்த குழந்தையை தோளில் சுமக்க வேண்டுமே என நீண்ட நாட்களாக அப்பரும் தவித்துக் கிடந்தார். ஈசன், அப்பர் தூக்க ஒரு முத்துச் சிவிகை என்ற பல்லக்கை சம்மந்தக் குழந்தைக்கு அருளினான். அது ஏன் அருளப்பட்டது என்பதை திருப்பூந்துருத்தி எனும் தலம் நோக்கி சென்றபோது ஞானக் குழந்தை புரிந்து கொண்டது. மதுரை வைகறையில் சைவம் பெரும் பெருக்கோடு சுழித்துக் கொண்டு ஓடியது. ஞான சம்பந்தர் நதியின் வேகத்தோடு சைவம் தழைக்க தஞ்சை நோக்கி நகர்ந்தார். ஞானக் குழந்தை சம்பந்தர் அந்த அழகான முத்துச் சிவிகையில் அமர ஞான சூரியனின் ஒளியால் அது இன்னும் வெண்மையாக ஒளிர்ந்தது. திருநாவுக்கரசரின் சிஷ்யர் ஒருவர் மூச்சிறைக்க ஓடிவந்து அடியார்களோடு சம்பந்தப் பெருமான் பூந்துருத்தியைக் காண வருகிறார் என்றார். சிவமும், சம்பந்தமும் ஒன்றல்லவா என்று பார்ப்போரிடத்திலெல்லாம் கண்களில் ஆனந்த பாஷ்பம் பொங்கக் கூறலானார்.
வெகுதொலைவே முத்துச் சிவிகை அசைவதும், மணிகளின் ஓசை காற்றினில் கசிந்து வருவதையும் கண்ட பூந்துருத்தி சிவனடியார்கள் சிலிர்த்துப் போனார்கள். இன்னும் விரைவாக நடந்து அருகேயுள்ள வெள்ளாம்பிரம்பூருக்குச் சென்றனர். சம்பந்த மூர்த்திகள் சிவிகையின் சீலையை உயர்த்தி முகம் மலரச் சிரித்தார். கூட்டத்தின் அகம் நிறைந்தது. தன்னை மறந்து சிவிகையை நோக்கி நடந்த கூட்டம் நாவுக்கரசரை மறந்தே போனது. அப்பரடிகளும் இதுதான் சமயமென்று கருதி அடியார்களுக்குள் சிறியோராய் தம்மை மாற்றிக் கொண்டார். சிவிகையை சுமக்கும் ஒருவரின் தோள் தொட்டு மெல்ல விலக்கினார். சந்தனத்தில் செய்திருந்த அந்தப் பல்லக்கில் முத்தும், மாணிக்கமும் மாறிமாறி ஒளிர்ந்தன. அவ்வொளியில் சம்பந்தர் இன்னும் அழகராய் தெரிந்தார். அப்பரடிகள் தாழ்வாய் இருக்கும் இவ்வுடம்பு பெரியோனாய் விளங்கும் குழந்தை எழுந்தருளும் சிவிகையை எப்படிச் சுமக்கும் எனக் கவலையுற்றவராய் தடுமாட்டத்தோடு பல்லக்கினடியில் வந்து சேர்ந்தார். அடியார்கள் சுற்றிலும் சூழ தம்முகம் வெளியே தெரியாதவராக முத்துச்சிவிகையை சுமக்கும் ஒருவரின் தோள் தொட்டார். அவர் முன்னே நகர, திருநெல்வாயில் நாயகனை மனதில் நினைந்து சிவிகையை தம் தோளில் ஏற்றார். திருநாவுக்கரசரின் திருவுள்ளம் களிப்புற்றது. கண்களில் கங்கையாக நீர் பொங்கி வழிய அவர் அகத்தில் தில்லைக்கூத்தன் ஆனந்தத் தாண்டவஞ் செய்தார்.
திருவாலம்பொழில் நெருங்கியதும் ஞானக் குழந்தை சீலையை விலக்கி வெளியே பார்த்தது. அப்பர் சுவாமிகள் எந்த இடத்தில் இருக்கிறார் என்று மனதில் நினைவெழ, தன் அமுத வாயைத் திறந்து அப்பர் எங்குற்றார் என சற்றே ஆச்சரியத்தோடு அருகிலிருப்போரிடம் வினவினார். எம்பெருமானே இவ்வடியேனை விசாரிக்கிறாரே என்றெண்ணி உருக்கமுற்று தம் சிரசை சற்றே வெளியே நீட்டி அண்ணாந்து அண்ணாரை பார்த்து ‘’தேவரீருடைய அடியேனாகிய யான் உம் அடிகள் தாங்கிவரும் பெருவாழ்வு பெற்று இங்குற்றேன்’’ எனச் சொல்லி முடிக்கும் முன்பு, சீர்காழி தந்த சீர்பிள்ளை சம்பந்தர் சட்டென்று தாவி மண்ணில் இறங்கினார். திருவதிகைத் தேவர் வீரட்டானர் ஆட்கொண்ட சிங்கமல்லவா இவர். எம்மைச் சுமந்து தான் பாக்கியமுற்றதாக கூறிக் கொள்ளும் இவர் திருவடியை தாம் ஏந்திக்கொள்ளுதல்லவா முறை எனத் பதை பதைப்படைந்தார். தலைதாழ்த்தி நாவரசரை நோக்கி ஓடினார். அதற்குள் அப்பரடிகள் சம்பந்த மூர்த்திகள் பணியும் முன்பே மான்குட்டியைப்போல் துள்ளி சம்மந்தரின் அடிபரவினார். திருத்தொண்டக் கூட்டம் கைகளிரண்டையும் மேலுயர்த்தி இதென்ன திருக்காட்சி என வியந்து அவ்விரு அடியார்களைச் சுற்றிலும் வட்டமாக வளைந்து பூமியில் வீழ்ந்து வணங்கியது. வெண்ணீற்று நாயகர்கள் மலர்ந்த தாமரையாக நின்றருள, எண்புறமும் விரிந்த இதழ்களாக சீரடியார்கள் தண்டனிட ஒருகணம் ஆலம்பொழில் கயிலாபுரியாக மாறியது.
இவ்வாறு அப்பரும், சம்மந்த மூர்த்திகளும் சந்தித்த தலமே திருவாலம்பொழில். இன்றும் இந்த முத்துச் சிவிகையை சுமக்கும் விஷயம் விழாவாகவே கொண்டாடப்படுகின்றது. யுகம் தாண்டிய புராணப் பெருமையும் இத்தலத்திற்கு உண்டு. தட்சனின் குமாரிகளில் வசு என்பவளுக்கு பிறந்தவர்கள் எட்டு பேர். இவர்களுக்கு அஷ்ட வசுக்கள் என்று பெயர். வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருந்த காமதேனுவை கவர்ந்து சென்றனர். அதனால் வசிஷ்டர், பூலோகத்தில் சென்று பிறக்குமாறு அஷ்ட வசுக்களுக்கும் சாபமிட்டார். தங்கள் முழு சாபமும் நீங்கிட அஷ்ட வசுக்களும் இத்தல ஈசனை வணங்கி விமோசனம் பெற்றார்கள். அஷ்ட வசுக்கள் வேறு யாருமல்ல. சந்தனுவுக்கும், கங்கைக்கும் பிறந்து கங்கையாலேயே கங்கை நதியில் கரைக்கப்பட்டவர்கள். அதனால் அவர்களின் சாபம் நிவர்த்தியடைந்தது. அதில் எட்டாவதாக பிறந்த அஷ்ட வசுக்களில் ஒருவர்தான் பீஷ்மர்.
இவ்வாறு திருமுறைகளும், புராணங்களும் திருவாலம்பொழிலை புகழ்கிறது. கோயிலை நெருங்க நெருங்க அதன் தொன்மை நம்மை சிலிர்க்க வைக்கிறது. பெரியதுமல்லாது, சிறியதுமல்லாது நடுவாந்திரமான கோயில். ஆலம்பொழில் எனும் பெயருக்கேற்றவாறு ஆலமரமே இங்கு தல விருட்சம். அப்பர் இங்கு சிவிகையை சுமந்தது மட்டுமல்லாமல், எப்போதும் இதயம் எனும் முத்துப் பல்லக்கில் ‘‘திருவாலம்பொழிலானைச் சிந்தி நெஞ்சே’’ என்கிறார். மூலவரான ஈசனின் திருநாமமே ஆத்மநாதேஸ்வரர். அதனால் கோயிலுக்குள் நுழையும்போது மனவெளி மூடி அகவெளி திறக்கும் அற்புதம் நிறைந்த சந்நதி. அன்று சம்மந்தக் குழந்தைக்கும் ஞானப்பால் ஊட்டியவள் இத்தலத்தில் ஞானாம்பிகை எனும் திருப்பெயர் கொண்டு விளங்குகிறாள். கிராமத்தின் எழிலும், ஈசனின் அருட் பொழிவும் சூழ திருவாலம்பொழில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றுக்கு 5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
