தமிழ்நாட்டில் 17.60 லட்சம் பேர் எழுதுகின்றனர் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதிய நடைமுறைகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் இந்த ஆண்டு மொத்தம் 17 லட்சத்து 61 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இந்த தேர்வுக்காக புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசுத் தேர்வுத்துறை அலுவலர்களுக்கான கல்விசார் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து, தேர்வுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் அமைதியாக தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகளை கூறினார். அதன் தொடர்ச்சியாக, பொதுத் தேர்வுகள் குறித்து கூறியதாவது: நடப்பு 2025-26ம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது.

பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு (அரியர்ஸ்) மார்ச் 3ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரையும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையும் நடக்கிறது. முன்னதாக மேற்கண்ட வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, பிளஸ் 2க்கு பிப்ரவரி 9ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், பிளஸ் 1க்கு பிப்ரவரி 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு பிப்ரவரி 23ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பொதுத் தேர்வுகளை பொருத்தவரையில் பிளஸ்2 தேர்வில் பள்ளி மாணவ, மாணவியர் 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 பேரும், தனித் தேர்வர்களாக 27 ஆயிரத்து 783 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுத உள்ளனர்.
பிளஸ் 1 தேர்வில் பள்ளிகள் மூலம் 19 ஆயிரத்து 107 மற்றும் தனித் தேர்வர்கள் 5 ஆயிரத்து 944 பேர் என மொத்தம் 25 ஆயிரத்து 51 பேர் எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பேர் மற்றும் தனித் தேர்வர்கள் 26 ஆயிரத்து 196 என மொத்தம் 9 லட்சத்து 9 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். இதுதவிர மேனிலை தேர்வில் 281, பத்தாம் வகுப்பில் 395 சிறைவாசிகளும் எழுத பதிவு செய்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, பிளஸ்2 வகுப்பு தேர்வுகளுக்காக தமிழகம், புதுச்சேரியில் 3412 தேர்வு மையங்களும், பிளஸ் 1 வகுப்பு தேர்வுக்கு 2615 தேர்வு மையங்களும், பத்தாம் வகுப்புக்கு 4219 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் நடக்கும் நாட்களில் நாள் ஒன்றுக்கு 49 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், தேர்வில் முறைகேடுகளை தடுக்க சுமார் 4900க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள தேர்வுகளில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளன.

அதன் விவரம்:
* மேல்நிலைத் தேர்வுகளில் இயற்பியல், வேதியியல், கணக்கு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்களில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்ட (A4 அளவில்) மடக்கை புத்தகங்கள் (log books) சுமார் 20 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* இந்த ஆண்டு முதல் கணக்குப் பதிவியல் பாடத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் ‘‘Ordinary Calculator without Programming’’ (சாதாரண கால்குலேட்டர்) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* தேர்வுக்கு வரும் மாணவ, மாணவியருக்கு கேள்வித்தாள் வழங்கிய பிறகு, ஒவ்வொரு தேர்வு அறையிலும் மீதம் உள்ள கேள்வித்தாள்களை தேர்வறை கண்காணிப்பாளர்களே மாணவர்கள் முன்னிலையில் உறையிலிட்டு சீலிடும் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறை காரணமாக கேள்வித்தாளின் ரகசியம் மற்றும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படுகிறது.
* சொல்வதை எழுதுபவர் சலுகையை பயன்படுத்தும் மாற்றுத் திறனாளித் தேர்வுகளுக்கு வழங்க 5 கேள்வித்தாள்கள் உறை அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த நடைமுறை காரணமாக, கேள்வித்தாளின் ரகசியம் மற்றும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படுகிறது.
* தேர்வுப் பணிகளில் ஆசிரியர்களை முழுமையாக ஈடுபடுத்தும் வகையில் சொல்வதை எழுதுவோர் நியமனங்களில் பிஎட், டிடிஇடி, கலைக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி பணியாளர்களை தன்னார்வலர்களாக நியமிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மேலும், அவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
* நேரடி தனித் தேர்வர்கள் இருப்பிட முகவரியை உறுதி செய்யவும், அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிப்பதை உறுதி செய்யவும், ஆதார் அட்டை சரிபார்க்கப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
* இந்த ஆண்டு பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள பள்ளிகளை பொருத்தவரையில் பிளஸ்2- 7545 பள்ளிகள், பிளஸ் 1 – 3612 பள்ளிகள், பத்தாம் வகுப்பு-12 ஆயிரத்து 467 பள்ளிகள் இடம் பெறுகின்றன.
* தேர்வறை கண்காணிப்பாளர்கள் பிளஸ் 2 தேர்வில் 44 ஆயிரத்து 624 பேரும், பிளஸ் 1 தேர்வில் 2 ஆயிரத்து 668 பேரும், பத்தாம் வகுப்பு தேர்வில் 49 ஆயிரத்து 542 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* டிஸ்லெக்சியா மற்றும் மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவியருக்காக சொல்வதை எழுதுவோர் எண்ணிக்கையை பொருத்தவரையில் பிளஸ் 2 தேர்வுக்கு 7465 பேரும், பிளஸ் 1 தேர்வுக்கு 186 பேரும், பத்தாம் வகுப்பு தேர்வுக்கு 12 ஆயிரத்து 292 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிர்வாகம் மேல்நிலை வகுப்பு பத்தாம் வகுப்பு
ஆண் பெண் ஆண் பெண்
அரசுப்பள்ளி 1,55,706 1,99,450 1,98,222 2,16,436
நிதியுதவி பள்ளி 84,590 1,06,262 1,00,688 1,08,815
தனியார் 1,37,031 1,16,653 1,44,569 1,14,076

மொழி வாரியாக தேர்வு எழுதுவோர்
* மேல்நிலை வகுப்புகளுக்கான தேர்வில் தமிழ் மொழியில் மொத்தம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 499 பேரும், ஆங்கில மொழிப் பாடத்தில் 4லட்சத்து 38 ஆயிரத்து 665 பேரும், கன்னட மொழியில் 120 பேரும், மலையாள மொழியில் 13 பேரும், தெலுங்கு மொழியில் 108 பேரும், உருது மொழியில் 287 பேரும், தேர்வு எழுதுகின்றனர்.
* 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழியில் 4 லட்சத்து 24 ஆயிரத்து 193 பேரும், ஆங்கில மொழியில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 623 பேரும், கன்னட மொழியில் 169 பேரும், மலையாள மொழியில் 33 பேரும், தெலுங்கு மொழியில் 118 பேரும், உருது மொழியில் 1509 பேரும் குஜராத்தி மொழியில் 10 பேரும், இந்தி மொழியில் 151 பேரும் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர்.
* அதேபோல தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் மொத்தம் 7 லட்சத்து 72 ஆயிரத்து 56 பேரும், பத்தாம் வகுப்பு தேர்வில் 8 லடத்து 81 ஆயிரத்து 978 பேரும் பதிவு செய்துள்ளனர். பிரெஞ்சு மொழியை முதன்மைப் பாடமாக கொண்டு பிளஸ் 2 தேர்வில் 17,854 பேரும், பத்தாம் வகுப்பு தேர்வில் 635 பேரும், இந்தி மொழியை முதன்மைப் பாடமாக கொண்டு பிளஸ்2 தேர்வில் 1942 பேரும், பத்தாம் வகுப்பு தேர்வில் 151 பேரும், அரபு மொழியை முதன்மைப் பாடமாக கொண்டு பிளஸ் 2 தேர்வில் 1648 பேர் எழுதுகின்றனர். சமஸ்கிருத மொழியை முதன்மைப் பாடமாக கொண்டு பிளஸ் 2 தேர்வில் 1930 பேரும், உருதுமொழியை முதன்மைப்பாடமாக கொண்டு பிளஸ் 2 தேர்வில் 2820 பேரும் எழுதுகின்றனர்.

Related Stories: