கிழக்கு கடற்கரை சாலையில் சட்டவிரோத கட்டிடங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் சட்டவிரோத கட்டிடங்களை, வருவாய்த்துறையுடன் இணைந்து சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கானத்தூர் ரெட்டிக்குப்பம், முட்டுக்காடு, குன்றுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி, திருவிடந்தை ஆகிய கிராமங்கள் உள்ளன. கடற்கரையை ஒட்டிய இக்கிராமங்களில் ஏராளமான வீட்டுமனைப் பிரிவுகள் உருவாகி உள்ளன. இவற்றில், கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு எந்த கட்டுமானங்களையும் அனுமதியின்றி கட்டக்கூடாது என கடலோர ஒழுங்கு மண்டல ஆணைய விதி உள்ளது. ஆனால், இந்த ஆணையத்தின் அனுமதி பெறாமலும், உள்ளாட்சி நிர்வாகங்கள், மாமல்லபுரம் உள்ளூர் திட்டக் குழுமம் ஆகியவற்றின் அனுமதி பெறாமலும், பல்வேறு வீட்டு மனைப்பிரிவுகள் அமைத்தல், கட்டிடங்கள், பங்களா வீடுகள், ரிசார்ட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், இவற்றிற்கு செல்ல அரசுக்கு தானம் அளிக்கப்படாத நிலங்களில், சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறிப்பாக கானத்தூர் ரெட்டிக்குப்பம், முட்டுக்காடு, குன்றுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி, திருவிடந்தை ஆகிய கிராமங்களில் இதுபோன்ற செயல்கள் அதிகரித்து உள்ளதாகவும், பேரிடர் காலங்களில் இது சிக்கலை ஏற்படுத்தும் எனவும் வழக்கில் கூறப்பட்டு இருந்தது. இந்த கிராமங்களில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சுற்றுச்சூழல் துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து ஆய்வு செய்து, சட்டவிரோத கட்டிடங்கள் எத்தனை, வீடுகள், சாலைகள் எத்தனை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

அதன்படி, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் அரிபாஸ்கர் ராவ், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய செங்கல்பட்டு மண்டல உதவி செயற்பொறியாளர் செந்தில்நாதன், கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு ெசய்தனர். அப்போது, இக்குழுவின் அறிக்கை விரைவில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: