கடலூர்: விபத்தில் பலியான போக்குவரத்து கழக மெக்கானிக் குடும்பத்திற்கு ரூபாய் 65 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குரோம்பேட்டை, ஆலந்தூர் பாரதிபுரம், பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்த்தோப் மகன் ஜெயசீலன் (47 ). தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்து கழகத்தில் மோட்டார் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். கடந்த 01.07.2021 அன்று கும்பகோணம்-சேத்தியாதோப்பு சாலையில் சேத்தியாதோப்பு பாலத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த கார் மோதியதில் ஜெயசீலன் சம்பவ இடத்திலே பலியானார்.
இது தொடர்பாக அவர் மகள் ஜெய சினேகா என்பவருக்காக கடலூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண்-I-ல் வழக்கறிஞர்கள் ஏ.எஸ்சந்திரசேகரன், உஷாராணி, கலையரசன் ஆகியோர் மூலமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி ஆனந்தன் ரூ.48,51,000/- வட்டியுடன் சேர்த்து ரூ.65,05,000/- (ரூபாய் அறுபத்தைந்து லட்சத்து ஐந்தாயிரம்)-ஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
